தொழில்நுட்பம்

         அணு ஆயுதப் போரின்   

          அகோர விளைவுகள்


Fig. 1
Atomic & Hydrogen Bombs
Explosion
உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான் !
கிருஷ்ண பரமாத்மா (பகவத் கீதை)
“ஹைடிரஜன் குண்டு அணு ஆயுதச் சோதனைகள் ஆரம்பமாகி விட்டால் இனி பூமியில் வாழும் உயிரினங்கள் அழிவுக்கும், சூழ் மண்டலத்தில் கதிரியக்க நச்சுப் பொழிவுக்கும் விஞ்ஞான யந்திரம் பாதை விரித்து விட்டது என்று அர்த்தம் !”
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
“எதிர்கால உலக யுத்தத்தில் இன்னும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டால், மனித இனம் தொடர்ந்து வாழ முடியாதபடி, பல்லாண்டு காலம் அபாயம் விளையப் போகின்றது ! அதை அகில நாடுகள் உணர வேண்டும் ! அபாயங்களை அனைவரும் அறியப் பிறகு உலக நாடுகள் வெளிப்படுத்த வேண்டும் ! உடனே அப்பணியைச் செய்யுமாறு, நாங்கள் உலக அரசுகளை வலியுறுத்தி விரைவு படுத்துகிறோம். நாடுகள் இடையே எழும் தீராச் சச்சரவுகள் போரிடுவதால் ஒருபோதும் தீரப் போவதில்லை ! உலக நாடுகள் தமக்குள் இருக்கும் பிரச்சனைகளை நீக்கிக் கொள்ள, வேறு சாமாதான வழிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்”.
பெர்டிரண்டு ரஸ்ஸல் (ஏப்ரல் 16, 1955)
Fig. 1A
Atomic & Hydrogen Bombs
அணு ஆயுதப் பெருக்கத்தை ஆரம்பித்த உலக விஞ்ஞானிகள் !
அணு ஆயுதப் படைப்புக்கு ஐம்பது ஆண்டுகளாக நேரிடையாகவோ அன்றி மறைமுக மாகவோ வழி வகுத்தவர்கள், முக்கியமாக ஐந்து விஞ்ஞான மேதைகள்! முதலில் கதிரியக்கம் [Radioactivity] கண்டு பிடித்த மேரி கியூரி! அடுத்து செயற்கைக் கதிரியக்கம் [Artificial Radioactivity] உண்டாக்கிய அவரது புதல்வி ஐரீன் கியூரி! அதன்பின் அணுவைப் பிளந்து, முதல் தொடரியக்கம் [Nuclear Chain Reaction] புரிந்த என்ரிகோ ·பெரிமி! இரண்டாம் உலகப் போரின் போது, ஹிட்லர் தயாரிக்கும் முன்னே, அமெரிக்க ஜனாதிபதியை அணு ஆயுதம் ஆக்கத் தூண்டிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்! முடிவில் போர் முடியும் தறுவாயில் பன்னாட்டு விஞ்ஞானிகளைப் பணி செய்ய வைத்து வெற்றிகரமாய் அணுகுண்டை உருவாக்கிச் சோதனை செய்த ராபர்ட் ஓப்பன்ஹைமர் !
ஜப்பான் ஹிரோஷிமா நாகசாகியில் அணுகுண்டுகள் விழுந்து கோர விளைவுகள் நிகழ்ந்த பின் உலகின் வல்லரசுகளும், மெல்லரசுகளும் உடனே அணு ஆயுதங்களை ரகசியமாய் உற்பத்தி செய்ய முற்பட்டன ! 1945 இல் அமெரிக்கா ஆக்கியதை, ஒற்று மூலம் பிரதி அடித்து, 1949 இல் ரஷ்யா தனது முதல் அணுகுண்டைச் சோதித்தது !
Fig. 1B
Rebuilt Hiroshima Now
அதன் பிறகு 1952 இல் பிரிட்டன், 1960 இல் பிரான்ஸ், 1964 இல் சைனா, 1974 இல் இந்தியா, 1998 இல் பாகிஸ்தான் போன்ற நாடுகள் அணு ஆயுதப் பந்தயத்தில் பின் தொடர்ந்தன ! இப்போது இஸ்ரேல், வட கொரியா ஈரான் ஆகிய நாடுகளும் அணு ஆயுத வல்லமை பெற்றுக் கொண்டு உலகைப் பயமுறுத்தி வருகின்றன ! உலக நாடுகளில் 115 தேசங்கள் முன்வந்து அணு ஆயுதப் பெருக்கத் தடுப்பு [Non Proliferation Treaty, NPT] உடன்படிக்கையை மதித்துக் கையெழுத்துப் போட்டுள்ளன! ஆனால் அர்ஜென்டைனா, பிரேஸில், சைனா, பிரான்ஸ், இந்தியா, இஸ்ரேல், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின் ஆகிய பல நாடுகள் அணு ஆயுதப் பெருக்கத் தடுப்பில் கையெழுத்திட ஒருங்கே மறுத்து விட்டன !
அணு ஆயுத யுகத்திற்கு அடிகோலிய ஐன்ஸ்டைன்
இரண்டாம் உலகப் போரை விரைவில் நிறுத்த அணு ஆயுதத்தை உருவாக்கும்படி 1939 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ·பிராங்கலின் ரூஸவெல்ட்டுக்கு ஆலோசனைக் கடிதம் எழுதி அனுப்பியவர், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்! அதுமுதல் அணு ஆயுத அரக்கன் உலகில் தோன்றி அவன் வமிசாவளி பெருகிக் கொண்டே போகிறது! அணுசக்தி யுகத்தைத் துவக்கி, உலக சரித்திரத்தில் ஒப்பிலாப் பெயர் பெற்ற ஐன்ஸ்டைன் அணுகுண்டுகளின் பெருக்கத்தையும், அணு ஆயுத வெடிப்புச் சோதனைகளின் அபாயத்தையும், தடுக்க முடியாமல் கடைசிக் காலத்தில் மனப் போராட்டத்தில் தவித்தார்.
Fig. 1C
Atomic Bomb Capacities
ஐன்ஸ்டைன் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் 1955 ஏப்ரல் 16 இல் வேதாந்த மேதை, பெர்டிரண்டு ரஸ்ஸல் (Bertrand Russell) தயாரித்த “அணு ஆயுதப் போர்த் தடுப்பு” விண்ணப்பத்தில் ஒன்பது விஞ்ஞானிகளுடன் தானும் கையெழுத்திட்டு ஒன்றாகக் கூக்குரல் எழுப்பினார்! “எதிர்கால உலக யுத்தத்தில் இன்னும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டால், மனித இனம் தொடர்ந்து வாழ முடியாதபடி, பல்லாண்டு காலம் அபாயம் விளையப் போகின்றது! அதை அகில நாடுகள் உணர வேண்டும் ! அபாயங்களை அனைவரும் அறியப் பிறகு உலக நாடுகள் வெளிப்படுத்த வேண்டும்! உடனே அப்பணியைச் செய்யுமாறு, நாங்கள் உலக அரசுகளை வலியுறுத்தி விரைவு படுத்துகிறோம். நாடுகள் இடையே எழும் தீராச் சச்சரவுகள் போரிடுவதால் ஒருபோதும் தீரப் போவதில்லை ! உலக நாடுகள் தமக்குள் இருக்கும் பிரச்சனைகளை நீக்கிக் கொள்ள, வேறு சாமாதான வழிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்”.
இவ்வாறு விஞ்ஞானிகளில் அமைதி மயவாதிகள் ஒருபுறம் அணு ஆயுதங்களை நிறுத்தம் செய்ய முற்படுகையில், அழிவு மயவாதிகள் மறுபுறம் ரகசியமாய் அணு ஆயுதங்களைப் பெருக்கிக் கொண்டு வந்தார்கள் !
Fig. 1D
Little Boy & Fat Man Bombs
Details
ஆக்கப் போவது அணு குண்டா ? அல்லது ஹைடிரஜன் குண்டா ?
1942 ஆம் ஆண்டு அமெரிக்க மன்ஹாட்டன் திட்டத்தில் மறைமுகமாகப் பணிசெய்த விஞ்ஞானிகள் முதலில் அணுப்பிளவுக் குண்டை [Fission Bomb] ஆக்குவதற்கு முயன்ற சமயத்தில் அணுப்பிணைவுக் குண்டையும் [Fusion Bomb] உண்டாக்க ஒரு சிலருக்கு ஆர்வம் எழுந்தது! அந்தப் பயங்கரப் படைப்பை மிக்க வெறியோடு நிறைவேற்றப் பல்லாண்டுகள் காத்துக் கொண்டிருந்த விஞ்ஞான மேதை, எட்வர்டு டெல்லர் [Edward Teller]! தீவிர அந்த வேட்கையை எட்வெர்டு டெல்லருக்கு முதலில் தூண்டி விட்டவர், என்ரிகோ ·பெர்மி [Enrico Fermi]! சிகாகோப் பல்கலைக் கழகத்தில் முதல் ஆராய்ச்சி அணு உலையை அமைத்து அணுக்கருத் தொடரியக்கம் புரிய ·பெர்மியின் கீழ் டெல்லர் பணி செய்யும் போது அவர்களுக்கு ஹைடிரஜன் குண்டைப் பற்றி ஓர் எண்ணம் உதயமானது! ஆனால் ஆரம்பத்திலேயிருந்து எட்வெர்டு டெல்லரை அதைரியப் படுத்தி, முதலில் ஆக்கப் போவது அணுப்பிளவுக் குண்டு, வெப்ப அணுக்கருக் குண்டு [Thermo Nuclear Bomb] அல்ல என்று அதிருப்தி உண்டாக்கியவர், மன்ஹாட்டன் திட்ட அதிபதி ராபர்ட் ஓப்பன்ஹைமர்! ஹைடிரஜன் குண்டுக்கு மறு பெயர் வெப்ப அணுக்கருக் குண்டு! சூப்பர் பாம் [Super Bomb], ஹெச் பாம் [H Bomb] எல்லாம் ஒன்றுதான்! அடுத்து 1947-1952 ஆண்டுகளில் ராபர்ட் ஓப்பன்ஹைமர் அமெரிக்க அணுசக்திப் பேரவைக்கு அதிபதியாக [Chairman, Atomic Energy Commission] இருந்த சமயத்திலும் டெல்லர் மறுமுறை உயிர்ப்பித்த ஹைடிரஜன் குண்டு திட்டத்தை அங்கீகரிக்காது ஒதுக்கித் தள்ளினார்!
Fig. 1E
Einstein, Robert Oppenheimer &
Edward Teller
இரண்டாம் உலகப் போர் முடிந்தபின் அமெரிக்கா, சோவியத் ரஷ்யா இரு நாடுகளுக்கும் இடையே ஊமைப் போர் [Cold War] மூண்டு பெரும் அளவில் வலுத்தது ! 1949 செப்டம்பரில் ரஷ்யா தனது முதல் புளுடோனிய அணுகுண்டைச் சோதனை செய்ததைக் கேட்டு, அதை எதிர்பாராத அமெரிக்கா அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தது! அமெரிக்காவின் மித மிஞ்சிய அணு ஆயுதப் பேராற்றல் சமமாகிப் போனதால், உடனே ஜனாதிபதி ட்ரூமன் மறைமுகமாய் வெப்ப அணுக்கரு ஆயுதம் உருவாக, எட்வெர்டு டெல்லருக்குப் பச்சைக் கொடி காட்டினார்! அதற்காகக் காத்துக் கொண்டிருந்த எட்வெர்டு டெல்லர், ரஷ்யாவுக்குப் பயம் உண்டாக்க ஓர் ராட்சத குண்டை உருவாக்கி, அமெரிக்காவை உலக நாடுகளில் உச்ச வலுத் தேசமாக ஆக்க உறுதி எடுத்துக் கொண்டார்! அந்த முயற்சியில் வெற்றி பெற்று 1952 நவம்பர் முதல் நாள் பசிபிக் கடலில் உள்ள எனிவெடாக் அடோல் [Enewetak Atoll] என்னும் தீவில் முதல் ஹைடிரஜன் குண்டு வெடித்துச் சோதிக்கப் பட்டது! ஏட்டிக்குப் போட்டியாக அடுத்து சோவித் ரஷ்யாவும் எட்டு மாதங்களுக்குள், 1953 ஆகஸ்டு 12 ஆம் தேதி ரஷ்ய விஞ்ஞானி பீட்டர் கபிட்ஸா [Peter Kapitsa] மூலம் உருவாக்கி, முதல் வெப்ப அணுக்கரு ஆயுத வெடிப்பச் சோதனையை வெற்றிகரமாகச் செய்து காட்டியது ! அந்த அணு ஆயுதப் பந்தயத்தைத் தொடர்ந்து 1957 இல் பிரிட்டன், 1967 இல் சைனா, 1968 இல் பிரான்ஸ் தமது முதல் ஹைடிரஜன் குண்டுகளைச் சோதனை செய்து, அமெரிக்கா, ரஷ்யாவுடன் சேர்ந்து ஐம்பெரும் வல்லரசுகள் என்று பெயர் பெற்றன ! இப்போது அமெரிக்கா, ரஷ்யா, (யுக்ரேய்ன்), பிரிட்டன், பிரான்ஸ், சைனா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய ஏழு நாடுகளும் சோதனைகளை நடத்தி உலகத்துக்கு அணு ஆயுத நாடுகளாய்த் தம்மை உறுதிப்படுத்தி உள்ளன.
Fig. 1F
Little Boy & Fat Man
Actual Bombs
அணு ஆயுதப் போர் மூன்றாவது உலகப் போராய் நிகழுமா ?
1945 இல் அமெரிக்கா ஜப்பானில் முதன்முதலாகப் போட்ட இரண்டு அணுக்குண்டுகளை ஒருபோக்குத் தாக்குதலாகத்தான் கருத வேண்டும். பதிலுக்குத் தாக்க ஜப்பானிடம் அப்போது அணு ஆயுதங்கள் கிடையா. இதுவரை உலகம் இருதரப்பு அணு ஆயுத யுத்தத்தைக் கண்டதில்லை ! ஆனால் இப்போது அணு ஆயுதமுள்ள ஏழு நாடுகள் இரண்டுக்குள் நட்புறவு குன்றி அப்படி ஓர் இருபுற யுத்தம் நிகழ்ந்து அணு ஆயுதங்கள் பயன்பட்டால் பயங்கரச் சிதைவுகள், அழிவுகள், கதிரியக்கப் பொழிவுகள் ஏற்படும். அவ்விரு நாடுகளுக்குச் சேதங்கள் நேருவதோடு அண்டை நாடுகளும் பாதிப்படையும். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டால் இரண்டு நாடுகளும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டா என்பது கட்டுரை ஆசிரியர் கருத்து. காரணம் இரண்டு நாடுகள் வேறானாலும் எலும்பும் சதையும் போல் நிலத்தாலும், நீராலும், இனத்தாலும், மதத்தாலும் ஒன்றாகச் சேர்ந்துள்ளன. போர் மூண்டாலும் இரண்டு நாடுகளும் அணுவியல் தொழிற்கூடங்களை ஒன்றை ஒன்று தாக்கக் கூடாதென்று வாக்கு மொழிகள் எழுத்து மூலம் கூறியுள்ளன ! ஆனால் பாகிஸ்தானில் தற்போதுள்ள கொந்தளிப்பு நிலையில் எந்த மூர்க்கர் குழு நாட்டைப் பிடித்து ஆட்டப் போகிறது என்பது பெரும் ஐயப்பாட்டில் இருப்பதால் அடுத்து என்ன நடக்கும் என்று யூகிப்பது கடினம்.
Fig. 1G
Albert Einstein
எத்தனை விதமான அணு ஆயுதங்கள் உள்ளன ?
இரண்டு விதமான அணு ஆயுதங்கள் இதுவரைச் சோதனைக்குள்ளாகி ஆக்கப் பட்டுள்ளன. நியூட்ரான் குண்டுகள் (Neutron Bombs) ஒருவித அணு ஆயுதமாக நாம் எடுத்துக் கொள்ளலாம். அணுப்பிளவு ஆயுதங்கள் (Fission Weapons), அணுப்பிணைவு ஆயுதங்கள் (Fusion Weapons) என்று இருபெரும் பிரிவில் பல்வேறு ஆற்றலைக் கொண்ட அணு ஆயுதங்கள் தயாரிக்கப் பட்டு பதுக்கி வைக்கப் பட்டுள்ளன ! கடந்த அறுபது ஆண்டுகளாக உருவான அணு ஆயுதங்கள் யாவும் ஓய்வாகத் தூங்கிக் கொண்டிருப்பதால் துருப்பிடித்து இப்போது முடக்கத்தில் தளர்ந்து போய்க் கிடக்கின்றன ! அவை யாவும் தூசி துடைக்கப் பட்டுப் புதுப்பிக்கப் படவேண்டும் ! அல்லது தற்போதைய கணினி யுகத் தொழில்நுட்பம் புகுத்துப்பட்டு புது விதமாக மாற்றப் பட வேண்டும். பல பில்லியன் டாலர் மதிப்பில் படைப்பான பழைய அணு ஆயுதங்களை இப்போது ஏவினால் அவை பகைவரை நோக்கித் தாக்குமா அல்லது சண்டி மாடுபோல் படுத்துக் கொள்ளுமா என்று எழுப்பி விட்டால்தான் தெரியும் !
Fig. 2
Atomic Bunker Buster Bomb
அணுப்பிளவு ஆயுதங்களில் (அணுக்குண்டு) எரிசக்தியாக யுரேனியம் -235, புளுடோனியம் -239 ஆகிய கன உலோகங்கள் பயன்படுகின்றன. மாறாக அணுப்பிணைவு ஆயுதங்களில் (ஹைடிரஜன் குண்டு) எளிய வாயுக்களான டியூடிரியம், டிரிடியம் (ஹைடிரஜன் ஏகமூலங்கள் ) (Deuterium & Tritium -Hydrogen Isotopes) உபயோகம் ஆகின்றன. டியூடிரியமும் டிரிடியமும் பிணைந்து சக்தி உண்டாக்குவதற்குச் சூரியன் போல் பல மில்லியன் டிகிரி உஷ்ணம் தேவைப் படுகிறது. அந்த உஷ்ணத்தை உண்டாக்க ஒரு சிறு அணுப்பிளவு இயக்கம் முதலில் ஹைடிரஜன் குண்டில் தூண்டப் படுகிறது. அவ்விதம் முதல் உந்து யுரேனிய வெடிப்பில் உண்டாகும் பல மில்லியன் டிகிரி உஷ்ணத்தில் டியூடிரியமும் டிரிடியமும் பிணைந்து வெடிப்பு சக்தியை வெளியேற்றுகிறது. பொதுவாக அணுப்பிணைவு ஆயுதம் அணு ஆயுதத்தை விட சுமார் ஆயிரம் மடங்கு அழிவு சக்தியை வெளியாக்கும் ! நியூட்ரான் குண்டு அணுக்குண்டு ஆற்றலில் பத்தில் ஒரு பங்கு பாதகம் விளைவிக்க வல்லது.
பல்வேறு டன் டியென்டி ஆற்றல் கொண்ட அணு ஆயுதங்கள்.
அமெரிக்கா ஹிரோஷிமாவில் போட்ட யுரேனியம் அணுக்குண்டு 15 கிலோ டன் டியென்டி ஆற்றலும், நாகசாக்கியில் போட்ட புளுடோனியம் அணுக்குண்டு 21 கிலோ டன் டியென்டி ஆற்றலும் கொண்டவை. அணு ஆயுதங்களின் வெடிப்புப் பரிமாணம் டியென்டி அளவீட்டில் [(TNT) -Trinitrotoluene -CH3C6H2(NO2)3 (A Powerful High Explosive)[ கிலோ டன் அல்லது மெகா டன் எண்ணிக்கையில் குறிப்பிடப் படுகிறது !
Fig. 3
Range of Warheads
கிலோ டன், மெகா டன் டியென்டி என்று அளவீடு செய்யும் போது அணு ஆயுதங்களின் எடையைக் குறிப்பிடாது அவற்றின் வெடி ஆற்றலை ஒரு டியென்டி இராசயன வெடிக்கு ஒப்பிடப் படுகிறது. ஒரு கிலோ டன் அணு ஆயுதம் 1000 டன் டியென்டி ஆற்றல் வெடிக்குச் சமம். ஒரு மெகா டன் அணு ஆயுதம் ஒரு மில்லியன் டன் டியென்டி ஆற்றல் வெடிக்கு இணையாகும். தற்போது வெப்ப அணுக்கரு ஆயுதம் (Thermonuclear Weapon OR Hydrogen Bomb) ஒன்று 25 மெகா டன் டியென்டி வெடி ஆற்றல் கொண்டதாக உள்ளது. மேலும் இப்போது 50 மெகா டன் டியென்டி வெடியாற்றல் உள்ள அணு ஆயுதங்கள் தயாரிக்கப் படுகின்றன. தற்போது பாதி உலகைக் கடந்து செல்லும் கட்டளை ஏவு கணைகளில் (Guided Missiles) அணுத்தாக்கு ஆயுதங்களை (Nuclear Strategic Weapons) ஏந்திக் கொண்டோ அல்லது ஆகாய விமானங்களிலிருந்து விடுவித்தோ நகரங்கள், தொழிற்துறை மையங்கள், இராணுவத் தளங்கள் ஆகியவை தகர்க்கப்படத் திட்டமிடப் படுகின்றன.
Target Hiroshima Nagasaki Tokyo Fire Raid
Dead/Missing 70,000-80,000 35,000-40,000 83,000 1,850
Wounded 70,000 40,000 102,000 1,830
Population Density 35,000 per sq mile 65,000 per sq mile
Total Casualties 140,000-150,000 75,000-80,000 185,000 3,680
Area Destroyed 4.7 sq mile 1.8 sq mile 15.8 sq mile 1.8 sq mile
1 B-29 1 B-29 334 B-29s B-29s
Weapon(s) 'Tall Boy' 15 kT (15,000 tons of TNT) 'Fat Man' 21 kT (21,000 tons of TNT)
Fig. 4
Radiation Exposure
அணு ஆயுத வெடிப்புகளில் நேரும் அகோர விளைவுகள்
1945 இல் அமெரிக்க போட்ட "லிட்டில் பாய்" அணுக்குண்டு ஹிரோஷிமா நகரை முற்றிலும் தகர்த்தது. அடுத்துப் போட்ட "·பாட் மான்" அணுக்குண்டில் நாகசாக்கி நகரம் தரைமட்டம் ஆனது. இவ்விரு நகரங்களில் ஏற்பட்ட விளைவுகளும், கதிர்வீச்சுக் காயங்கள், மரணங்கள், கதிரியக்க பொழிவுகளின் தீவிரம், நீண்ட கால விளைவுகள் அனைத்தும் மாதிரிப் பாடங்களாய் உலக நாடுகளுக்கு அறிவைப் புகட்டுகின்றன. ஆயுதங்களின் கிலோ டன் டியென்டி, மெகா டன் டியென்டி வெடிப்பு ஆற்றலுக்கு ஏற்ப விளைவுகளின் தீவிரம் குறையவோ கூடவோ செய்கிறது.
1. அணுக்குண்டு வெடிப்பு அலைகள் (Bomb Blast):
அணு ஆயுத வெடிப்பின் போது வெளியேறும் ஏராளமான வெப்ப அலைச்சக்தி சூழ்வெளிக் காற்றை அதிவிரைவில் சூடாக்குகிறது. வெப்ப வாயு விரைவாக விரிவாகிப் பாய்ந்து பரவும் அதிர்ச்சி அலையாகத் தாக்குகிறது. இவ்விதம் வெளியாவது பாதி அளவு வெடிப்புச் சக்தி. அந்த விளைவில் குண்டு வீழ்ந்த இடத்துக்கு நெருங்கிய கட்டடங்கள் தரை மட்டமாக்கப் பட்டுப் பல மைல் தூரம் வீடுகள் தகர்ந்து பொடியாகும் ! அத்துடன் போட்ட இடத்தில் பெருங்குழி ஒன்று
தோண்டப்படும்.
Fig. 5
Radiation Effects of
Human Body
2. வெப்ப சக்தி வெளியேற்றம் (Heat Wave Spread):
அணு ஆயுத வெடிப்பால் ஒரு மில்லியன் டிகிரி உஷ்ணமுடைய ஒரு பெரும் தீக்கோளம் உண்டாகும். அந்தத் தீப்பிழம்பில் தகர்க்கப் படாத வீடுகள், கட்டங்கள் பற்றிக் கொண்டெரியும். வெப்ப வெளியேற்றம் முழு ஆற்றலில் மூன்றில் ஒரு பங்காக கணிக்கப் படுகிறது. இந்த பயங்கரத் தீப்பிழம்பே ஒரு பெரு குடைக் காளான் முகில்போல் (Huge Mushroom Cloud) உயரே விரிந்து செல்கிறது.
3. கதிர்வீச்சு & கதிரடிப்பு (Direct Radiation Dose):
வெப்ப வெடிப்போடு அதிதீவிரக் கதிர்வீச்சு எல்லாத் திசைகளிலும் பாய்ந்து உயிரனங்களைத் தாக்குகிறது. அதில் முதலாக மோதும் நியூட்ரான்கள், காமாக் கதிர்களைத் "துரிதக் கதிர்வீச்சு" (Prompt Radiation - Mostly Neutrons & Gamma Rays) என்று குறிப்பிடப் படுகிறது. அதிதீவிரக் கதிரடிகள் (High Amount of Radiation Dose) மனிதரையும், விலங்குகளையும் உடனே அல்லது சில தினங்களில் கொன்றுவிடும் ! குறைந்த அளவு கதிரடிப்புகள் கதிர் நோய்களை உண்டாக்கி மெதுவாகக் கொல்லும். பேரளவு கதிர்வீச்சுக் கதிரடி புற்றுநோய்களை (Cancer) உண்டாக்கும்.
4. தாமதக் கதிரெழுச்சி விளைவுகள் (Delayed Radiation Effects) : அணுப்பிளவு விளைவுகளால் பின்னெழும் கதிரியக்கப் பாதிப்புகள் மாந்தருக்கு நீண்ட காலம் கேடு தருபவை. அக்கொடிய பாதிப்புகள் அணுப்பிளவு மூலகங்களின் "அரை ஆயுளைப்" (Half Life) பொருத்தவை. அரை ஆயுள் என்பது கதிரியக்கத் தேய்வு முறையில் நிலையற்ற மூலகம் (Unstable Elements due to Radioactive Decay) படிப்படியாகத் தேய்ந்து நிறை பாதியாகும் காலத்தைக் குறிப்பது. சீக்கிரமாகத் தேயும் நிலையற்ற மூலகம் சிறிது காலம் உயிரினத்தைப் பாதிக்கும். மெதுவாகத் தேயும் நிலையற்ற மூலகந்தான் நீண்ட காலம் உயிரினத்துக்குத் தொல்லை கொடுப்பது. இந்த கதிர்வீச்சு வாயு மூலகங்கள் சூழ்வெளிக் காற்றில் பல நாடுகளுக்கு பயணம் செய்து மக்களைப் பாதிக்கின்றன.
Fig. 6
Hiroshima & Nagasaki
Destruction
5. கதிரியக்கப் பொழிவுகள் (Radioactive Fallouts):
இறுதியாக நூற்றுக் கணக்கான மைல் காற்றில் கொண்டு செல்லப்பட்டு இந்த கதிரியக்கத் துணுக்குகள்தான் பொழிவுகளாகப் பூமியில் நிரந்தரமாகப் படிந்து விடுகின்றன. நீண்ட அரை ஆயுள் உடைய மூலகத் துணுக்குகள் பூமியில் தங்கி நெடுங்காலம் மனித இனத்துக்குத் தொல்லைகள் அளிக்கின்றன. அவையே நிலவளம், நீர்வளம், சூழ்வெளியைத் தீண்டி பல ஆண்டுகளுக்கு நாசம் புரிகின்றன.
6. விண்வெளிப் பாதிப்புகள் (Effects in Space):
அணு ஆயுதச் சூழ்வெளிப் பாதிப்புகள் குண்டு போடும் போது எந்த உயரத்தில் வெடிக்கிறது என்னும் மேல்மட்டத்தைப் பொருத்தது. அதிர்ச்சி அலைகளைப் பரப்பப் போதிய வாயு இல்லாமல் வெறும் கதிர்வீச்சுத் தாக்குதலே பெரும்பான்மையாக விளைந்திடும். வெப்ப சக்தி பரவிச் சென்று தீ மூட்டும் நிகழ்ச்சிகள் குன்றும். பொதுவாக நியூட்ரான், காமாக் கதிர்களின் தீங்கு மிகைப்படும்.
7. மின்காந்த அதிர்வு விளைவுகள் (Electromagnetic Pulse Burst):
அணு ஆயுத வெடிப்பிலே மிகவும் விந்தையான விளைவு : ஒரு பெரும் மின்காந்தத் துடிப்பு (Production of an Electromagnetic Pulse - A Powerful Burst of Electric Current) உண்டாவது ! கதிர்வீச்சில் பாய்ந்து செல்லும் காமாக் கதிர்கள் சூழ்வெளி வாயுவோடுச் சேரும் போது அவ்வித மின்காந்தத் துடிப்பு ஏற்படுகிறது ! அந்த மின்னோட்டம் மின்சார, மின்னியல் சாதனங்களை - கணினிகள், மின்சக்தி நிலையங்கள், தொலைக் கட்சி நிலையங்கள், ரேடியோ தொடர்புகள் போன்றவற்றைப் பெரும் அளவில் பாதிக்கும்.



Fig. 1
British Nuclear Warhead
உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான் !
கிருஷ்ண பரமாத்மா (பகவத் கீதை)
“ஹைடிரஜன் குண்டு அணு ஆயுதச் சோதனைகள் ஆரம்பமாகி விட்டால் இனி பூமியில் வாழும் உயிரினங்கள் அழிவுக்கும், சூழ் மண்டலத்தில் கதிரியக்க நச்சுப் பொழிவுக்கும் விஞ்ஞான யந்திரம் பாதை விரித்து விட்டது என்று அர்த்தம் !”
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
“எதிர்கால உலக யுத்தத்தில் இன்னும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டால், மனித இனம் தொடர்ந்து வாழ முடியாதபடி, பல்லாண்டு காலம் அபாயம் விளையப் போகின்றது ! அதை அகில நாடுகள் உணர வேண்டும் ! அபாயங்களை அனைவரும் அறியப் பிறகு உலக நாடுகள் வெளிப்படுத்த வேண்டும் ! உடனே அப்பணியைச் செய்யுமாறு, நாங்கள் உலக அரசுகளை வலியுறுத்தி விரைவு படுத்துகிறோம். நாடுகள் இடையே எழும் தீராச் சச்சரவுகள் போரிடுவதால் ஒருபோதும் தீரப் போவதில்லை ! உலக நாடுகள் தமக்குள் இருக்கும் பிரச்சனைகளை நீக்கிக் கொள்ள, வேறு சாமாதான வழிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்”.
பெர்டிரண்டு ரஸ்ஸல் (ஏப்ரல் 16, 1955)
Fig. 1A
Mushroom Cloud of A-Bomb
நியூட்ரான் கணைகள் தாக்கும் புதுயுக அணுக்குண்டுகள்
நியூட்ரான் குண்டு (Neutron Bomb) என்பது "மிகைப்பட்டக் கதிர்வீச்சுக் குண்டு" (Enhanced Radiation Weapon -ERW) என்று அழைக்கப்படுவது. இந்த அணுவியல் குண்டு பெரும்பான்மையான எரிசக்தியை வெடிப்புச் சக்தியாக வெளிப்படுத்தாமல் சக்தி ஊட்டப் பட்ட நியூட்ரான் கணைகளாக ஏவுகிறது. இம்முறையில் நியூட்ரான் குண்டு சாதாரண அணுக்குண்டு ஆற்றலில் பத்தில் ஒரு பங்கு வல்லமையே கொண்டுள்ளது. வெடிப்பும், வெப்ப சக்தியும் முழுமையாகத் தவிர்க்கப் படாமல் மிகையான நியூட்ரான்களின் தீவிரம் உயிரினத் தாக்குதலாய் விளைந்து வீடுகள், மாட மாளிகைகள், பாலங்கங்கள், வாகனங்கள், கட்டடங்கள் எதுவும் தகர்க்கப்படா. மேலும் நகரின் தொழில்வளத் துறைகள் (Infrastructure) எவையும் அழிக்கப்படா !
1958 இல் முதன்முதலாக அமெரிக்காதான் நியூட்ரான் குண்டுகளைத் தயாரித்தது ! நியூட்ரான் குண்டுகளின் பிதாவாகக் கருதப்படுபவர் : லாரென்ஸ் லிவர்மோர் தேசீயச் சோதனைக் கூடத்தின் சாமுவேல் கோஹென் (Samuel Cohen - Lawrence Livermore National Laboratory) என்பவர். முதல் சோதனை நெவேடா பாலைவன அடித்தளத்தில் 1963 இல் நடத்தப்பட்டது. 1978 இல் ஜனாதிபதி ஜிம்மி கார்டருக்கு ஏற்பட்ட எதிர்ப்புகளால் மேற்கொண்டு நியூட்ரான் குண்டுகள் விருத்தியும் பெருக்கமும் நிறுத்தமாகி, பிறகு ஜனாதிபதி ரோனால்டு ரேகன் காலத்தில் மீண்டும் 1981 இல் தொடரப் பட்டன.
Fig. 1B
Destruction Magnitude in
New York
மூன்று விதமான ERW நியூட்ரான் குண்டுகளை அமெரிக்கா விருத்தி செய்தது. அவை W66, W70 & W79 (Nuclear Warheads) என்னும் இராணுவக் குறி ஆயுதங்களாக அழைக்கப் பட்டன. W66 ஆயுதங்கள் 1970 ஆண்டுகளின் மத்தியில் தயாரிக்கப்பட்டுப் பின்னர் ஓய்வாகி விட்டன. W70 ஆயுதங்கள் சிறு தூரக் கட்டளை ஏவுகணைகளிலும் (Short-Range Missile System) W79 பீரங்கிக் குண்டுகளாகவும் (Artillary Shells) உபயோகமாயின. அவை இரண்டும் ஜனாதிபதி மூத்த ஜார்ஜ் புஷ் காலத்தில் ரஷ்ய அமெரிக்க "ஊமைப் போர்" (Cold War) முடிவில் (1992) ஓய்வாகின. இறுதி W70 ஆயுதம் 1996 ஆண்டிலும் & W79 ஆயுதம் 2003 ஆண்டிலும் முழுமையாக நீக்கம் அடைந்தன.
1980 இல் பிரான்ஸ் தனது முதல் நியூட்ரான் குண்டை பசிபிக் கடலில் உள்ள முரோரா அடோல் (Mururoa Atoll) தீவில் சோதித்தது ! 1980 ஆண்டுகளில் பிரான்ஸ் மேலும் சில நியூட்ரான் குண்டுகளை ஆக்கியதாக அறியப் படுகிறது. அதற்குப் பிறகு அவற்றை எல்லாம் பிரான்ஸ் முடக்கி முறித்ததாக கூறப்பட்டுள்ளது. 1999 இல் சைனா நியூட்ரான் குண்டுகள் ஆக்கும் திறனைப் பெற்றதாகத் தெரிகிறது. 1997 ஆம் ஆண்டில் நடந்த நேர்முக உரையாடலில் சாமுவேல் கோஹென் "ரஷ்யா, சைனா & இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஏராளமாக நியூட்ரான் குண்டுகள் அடுக்கை (Stockpile of Neutron Bombs) வைத்திருக்க வாய்ப்புள்ளன," என்று கூறியிருக்கிறார்.
Fig. 1C
Death Scenario in Major Cities
நியூட்ரான் குண்டு ஒருவித பிளவு-பிணைவுக் குண்டுதான் (Fission-Fusion Bomb). அது ஒரு வெப்ப அணுக்கரு யுத்த ஆயுதமே (Thermonuclear Weapon) ! அதில் வெடித்து மிகையாகி மீறிப் பெருகும் நியூட்ரான்கள் வெளியேறித் தாக்கும்படி ஏவப்படுகின்றன. நியூட்ரான் குண்டுக்கு ஏராளமான கொள்ளளவு (Volume) டிரிடியம் (ஹைடிரஜன் வாயுவின் ஏகமூலம்) (Tritium - An Isotope of Hydrogen Gas) தேவை. டிரிடியத்தின் "அரை ஆயுள்" சுமார் 12 ஆண்டுகள் (Half-Life). அதாவது டிரிடியத்தின் நிறை (Mass) 12 ஆண்டிகளில் பாதியாகத் தேயும். அதாவது அடிக்கடி நியூட்ரான் குண்டுகளில் மறையும் டிரிடியம் வாயு நிரப்பப் படவேண்டும்.
கதிரியக்கப் பொழிவுக் குண்டுகள் (புழுதிக் குண்டுகள்)
கதிரியக்கப் பொழிவுகளை வீசும் அணுவியல் குண்டுகள் புழுதிக் குண்டுகள் (Radioactive Dirty Bombs) OR (Radiological Dispersion Bombs) என்று பெயரிடப் பட்டுள்ளன. இவ்வகை அணுவியல் குண்டுகள் சாதாரண ரசாயன வெடிகளைப் பயன்படுத்திக் கதிரியக்கப் பொழிவுகளைச் சிறிதளவு தரைமீது (200 சதுர மைல்) பரப்பச் செய்யும். புழுதிக் குண்டுகளில் பொதுவாக இருப்பவை : ஸ்டிரான்சியம்-90 (Strontium-90), கோபால்ட்-60 (Cobalt-60) அல்லது சீஸியம்-137 (Cesium-137). புழுதிக் குண்டுகள் வீரிய கதிரியக்கமுள்ள காமாக் கதிர்வீச்சைத் தளமெங்கும் பரப்பும். இந்தப் புழுதிக் குண்டுகளை எளிதாக யாரும் தயாரிக்க முடியும். தேவையானவை : சாதாரண வெடி மருந்து அடுத்து கதிரியக்க உலோகம் ஏதாவது ஒன்று : ஸ்டிரான்சியம்-90 (Strontium-90), கோபால்ட்-60 (Cobalt-60) அல்லது சீஸியம்-137 (Cesium-137). இவற்றைக் காமாக் கதிர்ப் படங்கள் எடுக்கும் (Radio-graphy) தொழிற் கூடங்களில் அல்லது அணு உலைக் கூடங்களில் களவாட வேண்டும்.
Fig. 1D
Atomic Weapon Renewal
2002 மே மாத அறிக்கை ஒன்றில் அகில நாட்டு அணுசக்தி ஆணையகம் (International Atomic Energy Agency -IAEA) வெளியிட்ட புகார்த் தகவல் இது : ஆண்டுக்கு சராசரி 300 முறை கதிரியக்க உலோகங்கள் கணாமல் போன புகார்கள் ஆணையகத்துக்கு அனுப்பப் படுகின்றனவாம். மேலும் 1993 முதல் 2002 வரை IAEA பெற்ற புகார்கள் : 10 ஆண்டுகளில் காணாமல் போனக் கதிரியக்க உலோகங்கள் எண்ணிக்கை சுமார் 400 ! அமெரிக்காவில் மட்டும் 1986 முதல் 2002 வரை 15 ஆண்டுகளாக கதிரியக்க உலோகங்கள் காணாமல் போன 1700 நிகழ்ச்சிகள் நேர்ந்துள்ளன ! இவ்விதம் உலகில் பல நாடுகளில் கதிரியக்கக் களவுப் புகார்கள் குவிந்துள்ளன.
1. 1995 இல் ரஷ்யாவில் செச்சென் தீவிரவாதிகள் களவாடிய 30 பவுண்டு சீஸியம்-137 & டைனமைட் வெடி மருந்து.
2. 1987 இல் ஈராக் ஒரு டன் புழுதிக் குண்டை வெடித்துச் சோதனை செய்தது.
3. 1987 இல் பிரேஸில் 20 கிராம் சீஸியம்-137 யைக் களவாடி வெடிப்பு ஆற்றலைக் காட்டியது. அந்த சோதனையில் நால்வர் மரித்தனர். 249 நபர் கதிர்த்தீட்டை (Radioactive Contamination) அடைந்தனர்.
Fig. 1E
How it Works
அணு ஆயுதங்கள் உண்டாக்கிய முதல் பிரளயம் !
"உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன், நான் !" என்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் அர்ஜூனனுக்கு அருளிய ஓர் வேத மொழியை, நியூ மெக்ஸிகோ சோதனைத் தளமான டிரினிடியில் [Trinity], 1945 ஜூலை 16 நாள் சரித்திரப் புகழ் பெற்ற முதல் ஆய்வு அணுகுண்டு, பயங்கர வெடிப்பை உண்டாக்கிய போது, ராபர்ட் ஓப்பன்ஹைமர் [Robert Oppenheimer] கூறினார். அவர்தான் அணுகுண்டின் பிதா ! யுத்த சமயத்தில் பல நாட்டு விஞ்ஞான நிபுணர்களைத் தன்கீழ் இணைத்து, ஆணையிட்டு, ஆட்டிப் படைத்து, முதன் முதல் அணு ஆயுதங்களை ஆக்கிய தலைமை அதிபதி! ஒப்பற்ற விஞ்ஞான வல்லுநர், ஓப்பன்ஹைமர்! அணுகுண்டு புதுயுக மரண யந்திரம் ! வெடிக் கோளம் ! விஷக் கோளம்! கதிர்க் கோளம் ! கனல் கோளம் ! ஒளிக் கோளம் ! அழிவுக் கோளம் ! அவற்றின் அசுரப் பிடியில் நசுங்கி மடிவது பாமர மக்கள்! அணுகுண்டு வெடிப்பின் விளைவு, முடிவற்றுத் தொடரும் மரணக் கோலம் !'
Fig. 1F
Neutron Bomb
இரண்டாம் உலக மகா யுத்தத்தின் இறுதியில் 1945 ஆகஸ்டு 6, அடுத்து 9 ஆம் தேதிகளில் ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, நாகசாகியில் முதன் முதல் அமெரிக்கா தீவிரச் சக்தி பெற்ற அணு ஆயுதக் குண்டுகளைப் போட்டு, யுத்த அழிவுச் சரித்திரத்தில் ஒரு மாபெரும் புரட்சியை உண்டாக்கியது! 'எநோலா கே' [Enola Gay] என்னும் B-29 வெடி விமானத்திலிருந்து, காலை 9:14 மணிக்கு 'லிட்டில் பாய்' [Little Boy] என்னும் யுரேனியக் குண்டு [Uranium -235] ஹிரோஷிமாவை நோக்கி விழுந்தது. பத்தரை அடி நீளமும், இரண்டரை அடி விட்டமுடன், 9700 பவுண்டு எடையுள்ள 15 கிலோ டன் TNT வெடிச்சக்தி கொண்ட அணுக்குண்டு 2000 அடி உயரத்தில் ஹிரோஷிமா நகரின் மையத்திலே வெடித்தது! சில நிமிடங்கள் கழித்து, பரிதிபோல் ஒரு பேரொளிச் சிவப்புக் கோளம் பொங்கி எழுந்தது! அதைத் தொடர்ந்து பயங்கர வெடிச் சத்தம் வானைப் பிளந்து, ஒரு பிரளயமே உண்டானது! பதினொன்று மைல் தூரத்தில் திரும்பிச் சென்ற எநோலா கே வால் புறத்தை வெடி அதிர்ச்சி அலைகள் தாக்கி விமானத்தை ஆட்டியதாம்! நூறு மைல் தூரம் சென்ற பின்னும், கோள முகில் விமானியின் கண்களுக்குத் தெரிந்ததாம்! பிரம்மாண்டமான முகில் காளான் [Mushroom Cloud] தோற்றத்தில் பொங்கிக் குமுறி எழும் புகை மண்டலம்! நடுவே சிவப்பு நிறக் கோளம்! கோளத்தின் உட்கருவில் பொருட்கள் எரியும் கோரமான அனல் பிழம்பு! எங்கெங்கு பார்க்கினும், குவியல் குவியலாய்த் தீப்பற்றி அழிக்கும் கோரக் காட்சிகள்!
Fig. 1G
H-Bomb
ஹிரோஷிமாவில் மட்டும் 160,000 பேர் உயிர் இழந்தனர்! அதில் 60,000 பேர் பயங்கரமாகத் தீப்பற்றி எரிந்து கரிந்து போயினர். 130,000 பேர் காய முற்றனர். இதில் 43,500 பேர் படு காயப் பட்டனர். குண்டு வெடிப்புக்குப் பிறகு ஐந்து வருட மரண எண்ணிக்கை மொத்தம் 200,000 ஆக ஏறியது. மரணக் கணக்குப்படி, இரண்டு நகரிலும் 20%-30% அனல் வீச்சில் மாண்டனர். 50%-60% மற்ற அபாயத்தால் செத்தனர். 15%-20% கதிரியக்க நோயால் காலமானார்கள். நான்கு சதுர மைல் பரப்பில் 68% நகரக் கட்டிடங்கள் மற்றும் 24% பகுதிகள் சில நிமிடங்களில் தூள் தூளாகித் தரை மட்டமாயின! எண்ணிக்கையில் 70,000 கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்தன! நகர மாளிகை, தீயணைப்பு நிலையம், போலீஸ் நிலையம், தபால் நிலையம், ரயில்வே நிலையம், பள்ளிக் கூடங்கள், மருத்துவக் கூடங்கள், தெரு மின்சார வண்டிகள், மின்சக்தி நிலையங்கள் முழுவதும் தரை மட்டமாயின! 13,000 அடித் தொலைவில் இருந்த தொலை பேசிக் கம்பங்கள் கரிந்து போயின! நகரின் மருத்துவ டாக்டர்கள் 200 பேர் [90%] செத்து மாண்டனர்; அல்லது முடமாகிப் போயினர்! நகரில் இருந்த 1780 நர்ஸ்களில் 1654 பேர் கொல்லப் பட்டார்கள்: அல்லது காய மடைந்தார்கள். இருந்த 45 ஆஸ்பத்திரிகளில் 44 முழுமையாகவோ, அன்றிப் பகுதியாகவோ தகர்க்கப் பட்டன.
Fig. 1H
British Warheads
'·பாட் மான்' [Fat Man] என்னும் 22 கிலோ டன் TNT அழிவுச் சக்தி கொண்ட புளுட்டோனியக் குண்டு [Plutonium239] நாகசக்கியில் விழுந்து, 1945 ஆண்டு முடிவு எண்ணிக்கைப்படி 70,000 பேர் செத்து மடிந்தார்கள்! 33% நகரப் பகுதி தரை மட்டமானது! வெடி அதிர்விலும், வெடிப்பு அலையிலும், வெப்பக் கனலிலும் அழிந்தவர் போக, மற்றும் ஊடுருவிப் பாய்ந்த அணுக் கதிரியக்கம் தாக்கிப் பல்லாயிரம் பேர் பட்ட தொடர் வேதனைதான் எல்லாவற்றிலும் மிக முக்கியமானது! மூர்க்கமானது! முடிவில்லாதது! ஹிரோஷிமா, நாகசாகி நகர்களில் வெடியும், வெப்பக் கனலும் தாக்காமல் கடவுள் புண்ணியத்தில் தப்பியவர்கள், கடைசியில் கதிரியக்கம் தாக்கப்பட்டு, 'கதிர் எமன்' கையில் மெதுவாகச் செத்து மடிந்தார்கள்!
ஜப்பானுக்குச் சென்று 'அமெரிக்க வெடிவீச்சுத் திட்டப் பதிவுக்குழு' [The United States Strategic Bombing Survey Team] 1946 ஜூன் 30 இல் வெளியிட்ட, 'ஹிரோஷிமா, நாகசாகியில் போட்ட அணுகுண்டுகளின் விளைவுகள்' [The Effects of Atomic Bombs on Hiroshima & Nagasaki] என்னும் தகவல் கூறுகிறது: முக்கியமான விளைவு ஒரே சமயத்தில் நிகழும் மித மிஞ்சிய மரண எண்ணிக்கை! அடுத்து மூன்று வித உருவில் அணு ஆயுதம் பேரழிவுச் சக்தியாய் கோரக் கொலை புரிகிறது! முதலில் அளவற்ற வெப்பம்! இரண்டாவது பயங்கர வெடிப்பு அல்லது வாயு அழுத்தம்! மூன்றாவது தீவிரக் கதிரியக்கம்! பாதிக்கப் பட்டவர்களில் (20-30)% தீக்காய மரணங்கள்! அதிர்ச்சி, வெடிப்பு, வேறு விதங்களில் (50-60)% மரணங்கள்! மற்றும் (15-20)% கதிரியக்கக் காய்ச்சலில் பாதிப்பு [Radiation Sickness]! மூன்றிலும் மிக மிகக் கொடியது, கதிரியக்கத் தாக்குதல்! கதிரியக்கம் நொடிப் பொழுதில் சித்திரவதை செய்து மக்களைக் கொல்வதோடு, தொடர்ந்து உயிர் பிழைத்தோரையும், அவரது சந்ததிகளையும் வாழையடி வாழையாகப் பல்லாண்டுகள் [Acute (Lethal) & Long Term Effects] பாதித்துக் கொண்டே இருக்கும்! பிறக்கும் குழந்தைகள் கண்கள் குருடாகி, கால்கள் முடமாகி, கைகள் சிறிதாகி அங்க ஈனமாய் பிறக்கும்! மேலும் பலவிதப் புற்று நோய்கள் தாக்கி மக்கள் மரண எண்ணிக்கை அதிகமாகும்!
Fig. 2
Trust But Verify
மாபெரும் நகரம், நிமிடத்தில் மானிட நரகம் ஆனது !
குண்டு வெடித்தபின் உஷ்ணம் 1 மில்லியன் ஏறும் என்றும், ஒளித் தீக்கோளம் 800 அடி விட்டம் விரியும் என்றும், 'முகில் காளான்' [Mushroom Cloud] 9 மைல் மேலே உயரும் என்றும், பின்பு உஷ்ணம் 15,000 F ஆகக் குறையும் என்றும், அணுகுண்டு விஞ்ஞானிகள் கணக்கிட்டனர். வெடிமையத்தைச் [Hypocenter] சுற்றி 2 மைல் ஆரச் சுற்றளவில் உஷ்ணம் 5400 F ஆகித் தீயில் எரிந்து கூடான மனிதரும், தீப்புண்களில் கரிந்து போனவர்களும் பலர்! வெடி அலைகள் வினாடிக்கு 2 மைல் வேகத்தில் அடித்து மனிதர்களைக் குப்புறத் தள்ளியது! மானிடரின் முகம் தீய்ந்து கருத்து, தலை மயிர் யாவும் எரிந்து பலர் புத்த பிச்சுக்கள் போல் காணப் பட்டனர்! அவர்கள் மேனியில் தோலுரிந்து, கரும் பிசாசுகள் நகர்ந்து செல்வது போல் நடமாடி, பாதையில் செத்துக் கிடந்தார்கள்!
பாடிப் பறந்து கொண்டிருந்த பறவை இனங்கள் அந்தரத்திலே எரிந்து சாம்பலாயின! ஓடிய அணில்கள், வீட்டுப் பூனைகள், நாய்கள் மாயமாய் மறைந்து போயின! நகர் முழுவதும் ஒளி மயத்தில் பளிச் சென்று ஒளிர்ந்து, தீக்கோளம் எழுப்பி அணு ஆயுத மரண யந்திரம் வினை விதைத்தது போல் தோன்றியது! மரங்கள் யாவும் எரிந்து பாலை வனக் கரும் நிழற் படங்களாய் நின்றன! தொலைபேசி, மின்சாரக் கம்பங்கள் யாவும் கரிந்து வளைந்து போயின! காணும் இடமெல்லாம் மயானக் காடுகள் போல் எரியும், மாண்டு மடிந்த மனிதச் சடலங்கள் கணக்கில் அடங்கா!
Fig. 3
Air & Sear Launch Nuclear Warheads
விமானத்தையும், ஒளிக் கோளத்தையும் உற்று நோக்கியோர் கண்கள் அவிந்து போய்க் குருடாயின! ஒரு குமரிப் பெண் கூறினாள், 'ஒரு பெரும் சுத்தியலால் அடிபட்டு, அதிர்ச்சி அடைந்து, கொதிக்கும் எண்ணையில் தள்ளப் பட்டது போல் உணர்ந்தேன்! எங்கேயோ தூக்கி எறியப்பட்டு திசை யெல்லாம் மாறிப் போனதாய்த் திக்கு முக்காடினேன்!' ஒரு இளம் பெண்ணின் அவலக் குரல் கேட்டது. அவள் முதுகு பூராவும் எரிந்து, கூனிப் போய்க் கதறிக் கொண்டிருந்தாள். உதவி ஆட்கள் அவளுடைய தாயைத் தூக்கிக் கொண்டு வந்தனர். தாயின் முகமும், உதடுகளும் வீங்கிப் போய், கண்கள் மூடியபடி இருந்தன! இரு கைகளிலும் தோல்கள் உரிந்து, ரப்பர் கையுறை போல் தொங்கின! அவள் இடுப்புக்கு மேல் உடம்பில் எல்லா இடங்களும் கோரமாய் எரிந்து போயிருந்தன!
மனிதர்களின் உடம்பு பூதம்போல் பயங்கரமாய் வீங்கிப் போயிருந்தது! ஒரு மனிதன் கண்ணில் ஈட்டி போல் ஏதோ குத்தி, உதிரம் கொட்டி அலறிய வண்ணம் குருடனாய் அங்கு மிங்கும் ஓடிக் கொண்டிருந்தான்! எரியும் உடம்போடு ஓடி வந்து, ஒருவன் குளத்தில் குதித்தான்! குளத்தின் நீர் சூடாக இருந்தது. ஏற்கனவே, அந்தக் குளத்தில் எரிந்து போன சடலங்கள் பல மிதந்து கொண்டிருந்தன! அனலில் கரிந்த மாது ஒருத்தி, எரிந்த கைப் பிள்ளையை இறுகக் கட்டிய வண்ணம் சாய்ந்து செத்துக் கிடந்தாள்! ஒரு மின்சார வண்டி எரிந்து போய் வெறும் கூடாரம் போல் நின்று கொண்டிருந்தது! உள்ளிருந்த மாந்தர் அத்தனை பேரும் உருவம் தெரியாமல் கரிக் கூடுகளாய் உயிரற்றுக் கிடந்தனர்! ஓரிடத்தில், கரிந்து போன தாய் முலைக் காம்பிலிருந்து, பால் பருகக் குழந்தை வாய் வைத்துக் கொண்டிருந்தது! அணு ஆயுதம் ஹிரோஷிமாவில் நடத்திய அவல நாடகக் காட்சிகள் எல்லாவற்றையும் எழுத இங்கே இடம் போதாது!
Fig. 4
Gravity Drop Bombs
வெடி விளைவை நேரில் கண்ட இரு ஜப்பானியரின் நிஜக் கதை!
Dr. மிச்சிஹிகோ ஹசியா [Dr. Michihiko Hachiya]: 'பொழுது புலர்ந்து எழிலுடன் இலைகள் சலசலக்க, காலை இளம் பரிதி முகிலற்ற கீழ் வானில் மெதுவாய் எழுந்தது. மருத்துவக் கூடத்திற்குப் போக உடை அணிந்து கொண்டு புறப்படும் சமயம், யுத்த அபாயச் சங்கு ஊதியது! பறக்கும் விமானச் சத்தம் கேட்டது. திடாரென மாபெரும் மின்னல் ஒளிமயம் வெட்டிக் கண்ணொளியைப் பறித்தது! அடுத்து ஓர் பேரொளி! தோட்டத்தில் இருந்த லாந்தல் உலோக விளக்கு என்று மில்லாத பிரகாசத்தில் ஓளிர்ந்தது! வெளிச்ச மயமாய் இருந்த வானத்தில் விரைவில் இருள் கவ்வியது. சட்டென அருகில் நின்ற தூண் ஒன்று சாய்ந்து, வீட்டுக் கூரை சரிந்து அபாய நிலையில் தொய்ந்தது! வீட்டிலிருந்து தப்பி ஓட முயலும் போது, மரக் கம்பங்களும், இடிந்த கட்டிடக் குப்பைகளும் வீதியில் நிறைந்து, பாதையில் தடையாயின! எப்படியோ தாண்டிப் போய் தோட்டத்தினுள் நுழைந்தேன். ஏதோ தாங்க முடியாத ஓர் பெருங் களைப்பு என்னை ஆட்கொண்டது! திடீரென நான் அமணமாய்ப் போனது எனக்குத் தெரிந்தது! என் கோட்டும், சூட்டும் என்ன வாயின ? என்ன நடந்து கொண்டிருக்கிறது ? என்னுடலின் வலது புறம் யாவும் வெட்டுப் பட்டு, உதிரம் பீரிட்டது! கூரிய ஒரு நீண்ட இரும்பு ஆணி என் தொடையைக் குத்தி வலியை உண்டாக்கியது! என் கன்னம் கிழிந்து வாயில் இரத்தக் குளமானது! கழுத்தில் குத்திய ஓர் உடைந்த கண்ணாடி பீங்கானைக் கையால் எடுக்க, மேனி முழுதும் இரத்தக் குளிப்பில் நான் நடுங்கினேன்! முதல் அணு குண்டால் தாக்கப் பட்ட இந்த டாக்டர்தான், தன் காயத்துடன் காயம் பட்ட நூற்றுக் கணக்கான ஜப்பானியர்களுக்குச் சிகிட்சை செய்திருக்கிறார்!
Fig. 5
Inside the H-Bomb
சுடோமு யமகூச்சி [Tsutomu Yamaguchi]: திடாரென மெக்னீஷியம் தீப்பிழம்பு போல் ஓர் ஒளிமயமான மின்னல் வெட்டியது! தொடர்ந்தது ஒரு பேரிடிச் சத்தம்! பூமிக்கு மேல் 2 அடி தூக்கப் பட்டேன்! அடுத்து பயங்கரக் காற்று என் மீது வீசிச் சென்றது. பேயடித்தது போல் வீதியில் எவ்வளவு நேரம் கிடந்தேன் என்று எனக்கே தெரியாது! எழுந்த போது, இருள் சூழ்ந்து, கண்ணுக்கு எதுவும் தென் படவில்லை. வெக்கை யுள்ள பட்டப் பகல் திடாரென நள்ளிராப் பொழுது போல் ஆனது. என் கண்கள் இருட்டுக்கு இணங்கிப் போனபின், தூசிக் குப்பைகள் தொடர்ந்து வேகமாய் வீசின! தூசி குறைந்த பின், சூழ்வெளி தெரிந்தது. எங்கெங்கு நோக்கினும், உடைந்த பொருட்களின் குவியல்! எரியும் தீமயம்! நகர்ப் புறம் பார்த்தால், பிரம்மாண்டமான ஒரு ராட்சதக் காளான் [Mushroom] தோற்றத்தில் வானுயர்ந்த முகில் பூதம்! அந்த முகில் கோளம் பார்ப்பதற்கு பயமூட்டும் ஒரு பேயுருத் தூணாகத் தோன்றியது!
அது சுற்றியுள்ள எல்லா பொருட்களின் நிறத்தையும் மாற்றிக் கொண்டே இருந்தது. மிக்க வலுவில்லாமல், முகத்திலும் கையிலும் பற்றிய நெருப்புடன், தீராத வேதனையோடு அருகே இருந்த உருளைக் கிழங்கு வயலை நோக்கித் தடுமாறிக் கொண்டு சென்றேன். சில சமயம் என்னால் ஊர்ந்து செல்லத்தான் முடிந்தது! பிறகு எனக்குப் பயங்கரத் தாகம் உண்டானது. எதிரே ஐந்து வாலிபப் பையன்கள் அமணமாகக் கிழிந்த துணிகளுடன் இருந்தனர். அருகில் வந்ததும் அவர்கள் யாவரும் வெளுத்துப் போய், நடுங்கிக் கொண்டிருந்தார்கள். நான் இத்தகையக் கோரக் காட்சியை இதுவரைக் கண்டதில்லை! மேனி எங்கும் வெட்டுக் காயத்தால் உதிரம் ஆறாக ஓடிக் கொண்டி ருந்தது! கொதிக்கும் எண்ணெயில் வெந்தது போல் சிவந்து, தோலுரிந்து வேர்வை சொட்டச் சொட்ட வேதனையில் துடித்துக் கொண்டிருந்தார்கள்! வெடி அதிர்வால் தீய்ந்த புண்களில் பச்சைப் புல் கொத்தாய் ஒட்டிக் கொண்டிருந்தது. முதுகில் எல்லா இடங்களிலும் சாட்டையால் அடித்தபோல் காயங்கள்!
Fig. 6
Hiroshima & Nagasaki
Destruction
உயிர் பிழைத்தோர் பெற்ற கதிரியக்க நோய்கள்
உயிர் தப்பியவர்கள் பலர் புதுவிதக் கதிர் நோய்கள் [Radiation Sickness] தம்மைத் தாக்குவதை உணர்ந்தார்கள். தலைச்சுற்று, மயக்கம், வயிற்று வலி, வாந்தி, பசியில்லாமை, வயிற்றாலை, மலத்தில் இரத்தம், கடுஞ் சுரம், வலுவின்மை, தோலில் சிவப்புப் பொட்டுகள், மேனியில் வீக்கம், வாய் கழுத்து பல்லணை [Gum] இவற்றில் அல்ஸர், இரத்தக் கசிவு, மலத் துவாரம், சிறுநீர்த் துவரங்களில் இரத்தக் கசிவு, தலை மயிர் உதிர்ப்பு போன்ற உடற் பழுது அறிகுறிகள் தோன்றி, நோய் வருகையை முன்னறி வித்தன! மிகையான கதிரடி [Radiation Dose] வாங்கியோர் உதிரத்தில், வெள்ளை செல் [White Blood Cells] எண்ணிக்கை, மிகக் கீழாக குறைந்தது! அதிகமான 'மரண அடிக்' [Lethal Dose] கதிரியக்கம் தாக்கப் பட்டோர் சில மணி நேரத்தில், அல்லது சில நாட்களுக்குள் செத்து மடிந்தனர். மரண அடிக்கும் குறைந்த அளவு கதிரடி பட்டோர், சிறுகச் சிறுகச் சாவை அண்டி வந்தனர்.
வெடிப்பிளவின் நேரடிக் காமாக் கதிரடி [Direct Gamma Radiation] பட்டோர், பட்ட இடத்தில் தசைகள் சமைக்கப்பட்டு ஆறாத கதிர்ப் புண்களாகி வேதனையில் துடித்தனர். இவ்விதத் தாக்குதலால், இறுதியில் ஆழமான தசை அழிவு ஏற்பட்டு, மாபெரும் இரத்தக் கசிவு [Hemorrhage] தொடர்ந்து, அவர்கள் யாவரும் மரணத்தைப் போய்த் தழுவிக் கொண்டார்கள்! போர் முடிந்த பின்பு, ஹிரோஷிமா, நாகசாகியில் தப்பினோர்களின் மார்பு எக்ஸ்ரேயைச் சோதித்த போது, ஆயிரக் கணக்கான பேர் புற்றுநோயிலும் [Cancer], லுக்கீமியாவிலும் [Leukemia], முலைப் புற்றுநோயிலும் சாகப் போகி றார்கள் என்று அறியப் பட்டது. டாக்டர் நார்மன் கென்ட்நர் [Dr. Norman Gentner, Senior Scientist, Health and Environmental Sciences, Atomic Energy of Canada Ltd] விஞ்ஞானி வெளியிட்ட 1997 கணக்கிதழ் அறிக்கைப்படி, இரண்டு நகரிலும் மொத்தம் 15405 பேர் [1950-1990] புற்றுநோயில் செத்திருக்கிறார்கள். லுக்கீமியாவில் இறந்தவர் எண்ணிகை இதுவரை 249 பேர். புற்றுநோய் மரணங்கள் இன்னும் பல்லாண்டுகள் தொடரும்!
Fig. 7
Atomic Mushroom Cloud
கதிரடிக் காயம் [Radiation Injury] பெறும் கர்ப்பிணிப் பெண்களின் கருவைக் காமாக் கதிர்கள் பாதித்துப் பெருமளவில் முரண்பாடுகளை உண்டு பண்ணுகிறது. ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அணு ஆயுதக் கதிரியக்கம் தாக்கிய கர்ப்பிணிப் பெண்கள் பெற்ற பிள்ளைகள், நரம்பு அமைப்பாட்டில் பழுதுகள் ஏற்பட்டு, சிறிய தலைவுடன் மூளை சிறுத்துப் போய், கண்கள் குறுகி வளர்ச்சி அடையாது, அங்க ஈனமுடன், மனக் கோளாறுகள் [Mental Retardation] நிரம்பிப் பிறந்ததாக அறியப்படுகிறது!
உலக அணு ஆயுத வல்லரசுகளுக்கு ஓர் வேண்டுகோள்!
அணுகுண்டு ஆயிரம், ஆயிரம் உயிர் இனங்களைத் தாக்கிச் சித்திரவதை செய்து அழிக்கும் ஓர் அபாய ஆயுதம்! அதன் கோரக் கொடுமைகள் தப்பியோரையும், தப்பினோர் சந்ததிகளையும் விடாது பற்றிக் கொண்டு, பல்லாண்டு காலம் நிழல் போலத் தொடர்ந்து பாதிப்பவை! ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, 1955 ஏப்ரல் மாதம் பிரிட்டிஷ் மேதை, பெர்டிரண்டு ரஸ்ஸல் [Bertrand Russell] தயாரித்த 'அணு ஆயுதப் போர்த் தடுப்பு' விண்ணப்பத்தில் தானும் கையெழுத்திட்டு மற்ற உலக விஞ்ஞானிகளோடு சேர்ந்து கொண்டு ஒன்றாகக் குரல் எழுப்பினார்! 'எதிர்கால உலக யுத்தத்தில் இன்னும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டால், மனித இனம் தொடர்ந்து வாழ முடியாதபடி, பல்லாண்டு காலம் அபாயம் விளையப் போகிறது ! அதை அகில நாடுகள் உணர வேண்டும் ! பிறகு அபாயங்களை அனைவரும் அறிய வெளிப்படுத்த வேண்டும்! அப்பணியை உடனே செய்யுமாறு, நாங்கள் உலக அரசுகளை விரைவு படுத்துகிறோம். நாடுகளின் தீராச் சச்சரவுகள் உலகப் போர்களால் ஒருபோதும் தீரப் போவதில்லை! தமக்குள் இருக்கும் பிரச்சனைகளை நீக்கிக் கொள்ள, வேறு சாமாதான வழிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்'. அணு ஆயுத வல்லரசுகளே ! உங்கள் அறிவுக் கண்கள் திறக்கட்டும் ! ஜப்பானில் முதன் முதல் போட்ட அணுகுண்டுகளே, உலகின் இறுதியான அணுகுண்டுகளாக இருக்கட்டும்!


அணிவிக்க லாமா ?



Fig. 1
Pakistan Atomic Bomb Test
Site


உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான் !

கிருஷ்ண பரமாத்மா (பகவத் கீதை)

"முஸ்லீம்களாகிய நாம் வல்லவராகவும், நம் நாடு மற்ற நாடுகளுக்கு இணையாகவும் இருக்க வேண்டும். அதனால்தான் சில நாடுகள் வல்லமையோடு இருக்க நான் உதவி செய்ய விரும்புகிறேன்,"

அப்துல் காதீர் கான் (Abdul Qadeer Khan, Maker of Pakistan Atomic Bomb)

"இந்தியா ஓர் அணு ஆயுதத்தைத் தயாரித்தால் பாகிஸ்தான் புல்லைத் தின்றோ இலைகளைத் தின்றோ பட்டினி கிடந்து அதைத் தானும் பின்பற்றிச் செய்யும்."

ஸ¤ல்·பிகார் அலி புட்டு (Zulifikhar Ali Bhuttu) பாகிஸ்தான் வெளிநாட்டு அமைச்சர்.

“இப்போது நிகழ்ந்தது போல் (1945 இரண்டாம் உலகப் போர்) நீண்ட காலம் உலக நாடுகள் போரிடுமே யானால், ஒவ்வொரு தேசமும் தன்னைக் காத்துக் கொள்ளவே நவீன விஞ்ஞான ஆயுதங்களைப் படைக்கவோ அன்றிப் பயன்படுத்தவோ செய்யும் ! இந்தியா தனது விஞ்ஞான ஆராய்ச்சிகளை ஆரம்பித்து விருத்தி செய்ய முற்படும் என்பதில் எனக்குச் சிறிதும் ஐயம் இல்லை ! அணுசக்தியை இந்திய விஞ்ஞானிகள் ஆக்க வினைகளுக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன். ஆனால் இந்தியப் பாதுகாப்புக்குப் பங்கம் நேரும்படி, அது பயமுறுத்தப் பட்டால், தன்னிடம் இருக்கும் எல்லா விதமான ஆயுதங்களையும் இந்தியா தயங்காமல் பயன்படுத்தி எதிர்த்துப் போராடும் !”

பண்டிட் ஜவஹர்லால் நேரு (முதல் பிரதமர்) (1946 ஜூன் 26)

“அரசாங்கம் ஆணையிட்டால் இந்தியாவும் 18 மாதங்களில் இது (சைனா அணு ஆயுத வெடிப்பு) போன்று அணு ஆயுத சோதனை செய்ய முடியும்.”

டாக்டர் ஹோமி ஜெ. பாபா (அணுசக்திப் பேரவை முதல் அதிபர்) (1964)


Fig. 1A
Pakistan Nuclear Sites


பாகிஸ்தானின் முதல் அணு ஆயுதத் தயாரிப்புக்கு ஏற்பாடு

1948 இல் பண்டித நேரு அணுசக்தி ஆராய்ச்சிக்கு அடிகோலி, டாக்டர் ஹோமி பாபா அணுசக்திப் பேரவையின் தலைவராகி, மொம்பையில் அணு ஆராய்ச்சிக் கூடத்தை நிறுவி 1954 ஆம் ஆண்டில் முதல் ஆராய்ச்சி அணு உலை சைரஸ் (CIRUS Research Reactor) கட்ட ஆரம்ப வேலைகள் நிகழ்ந்த போது, பாகிஸ்தான் தனது அணுசக்தி ஆணையகத்தை நிறுவியது. அதன் தலைவர் நாஸீர் அஹமத் (Nazir Ahmad). அவர் அதற்கு முன்பு நூலிழைத் தொழிற்குழு (Textile Committee) அதிபராகப் பணியாற்றியவர். 1960 ஆண்டுகளில் பாகிஸ்தான் அணுவியல் ஆணையகத்தின் விஞ்ஞான ஆலோசகராக முக்கியப் பங்கேற்று டாக்டர் அப்துஸ் ஸலாம் (Dr. Abdus Salam) (1926 -1996) (Pakistani Theoretical Physicist, Astrophysicist and Nobel Laureate in Physics for his work in Electro-Weak Theory.) பணியாற்றினார். பின்னால் அவரது "வலுவிலா மின்னியல் நியதிக்கு" அவர் நோபெல் பரிசு (1979) அளிக்கப்பட்டார். டாக்டர் அப்துஸ் ஸலாமின் மாணவரான ரியாஸ¤த்தீன் (Riazuddin) என்பவரே 1977 ஆண்டில் முதல் அணு ஆயுதச் சாதனத்தின் அமைப்பு டிசைனைத் தயாரித்தவர். பாகிஸ்தானின் முதல் ஆராய்ச்சி அணு உலை 1965 ஆண்டில் இயங்க ஆரம்பித்தது. பாகிஸ்தானின் முதல் அணுமின் சக்தி நிலையம் 1970 இல் பூரணம் அடைந்தது.


Fig. 1B
Dr. Abdus Qadeer Khan


1965 பாகிஸ்தான் பாரதத்தோடு புரிந்த போரில் தோற்ற பிறகு பல பாகிஸ்தானி அரசியல்வாதிகளும், விஞ்ஞானிகளும் அரசாங்கம் அணு ஆயுதத் தயாரிப்பில் முழுமையாக இறங்க வேண்டும் என்று அழுத்தமாக வற்புறுத்தல் செய்தனர். அப்போது வெளிநாட்டு அமைச்சராக இருந்த ஸ¤ல்·பிகார் அலி புட்டு (Zulifikhar Ali Bhuttu) "இந்தியா ஓர் அணு ஆயுதத்தைத் தயாரித்தால் பாகிஸ்தான் புல்லைத் தின்றோ இலைகளைத் தின்றோ பட்டினி கிடந்து அதைத் தானும் பின்பற்றிச் செய்யும்." என்று கூக்குரலிட்டார். 1971 டிசம்பரில் இந்தியாவோடு நடந்த போரில் பெற்ற அடுத்த தோல்விக்குப் பிறகு புட்டு பாகிஸ்தான் பிரதம மந்திரியாக ஆக்கப் பட்டார். அந்த ஆதிக்க ஆணையில் ஜனவரி 1972 பிரதமர் புட்டு பாகிஸ்தான் விஞ்ஞானிகள் குழுவைக் கூட்டி அவருடன் உரையாடி அணு ஆயுதத் தயாரிப்புக்கு முதன்முதலாக விதையிட்டார்.

அணு ஆயுதத் தரமுள்ள அணுவியல் எருக்கள் தயாரிப்பு

முதல் பிரச்சனை. அணு ஆயுதத்துக்கு வேண்டிய மூல வெடி உலோகம் புளுடோனியம் -239 அல்லது அணு ஆயுதத் தரமுள்ள யுரேனியம்-235 (Weapon Grade Uranium -235) தயாரிப்பு. புளுடோனியம் -239 என்பது யுரேனியம் -238 போல் இயற்கையாகக் கிடைக்கும் சாதாரண உலோகமில்லை. இயல் யுரேனியத்தை (Natural Uranium) எரி உலோகமாய்ப் பயன்படுத்தும் அணு உலைகளைப் பல மாதங்கள் இயக்கிக் கிடைக்கும் கதிரியக்கக் கழிவு மிச்சத்தில் புளுடோனியம் -239 இரசாயன முறையில் பிரித்தெடுக்கப் பட வேண்டும். அது நீண்ட கால அணு உலை இயக்கம். முக்கியமாக புளுடோனியம் -239 எரி உலோகத்தை ஆக்க இயங்கும் அணு உலையும், கதிரியக்கக் கழிவுகளைக் கையாண்டு கடின முறையில் சிறிதளவு புளுடோனியத்தைப் பிரிக்கும் சிக்கலான ஓர் இரசாயனத் தொழிற்சாலையும் அமைக்க வேண்டும்.


Fig. 1C
Pakistan Nuclear Scientists


நாளொன்றுக்கு ஒரு மெகா-வாட் சக்தியை ஓர் அணு உலை உற்பத்தி செய்தால் ஒரு கிராம் புளுடோனியம் -239 கிடைக்கும். அணு ஆயுதத் தரமுள்ள (> 93%) புளுடோனியம் -239 தயாரிக்கப் அணு உலையின் ஆற்றலைப் பொருத்துப் பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் ஆகலாம். இந்தியா ஆரம்பத்திலேயே கதிரியக்கக் கழிவுகளைச் சுத்தீகரித்துப் புளுடோனியத்தைப் பிரித்தெடுக்கும் அணுவியல் துறை நுணுக்கத்தில் பயிற்சிகள் செய்து பல்லாண்டு அனுபவம் பெற்றது. ஆனால் பாகிஸ்தானில் இவ்விதம் புளுடோனியம் -239 எருவை அணுப்பிளவுக் கழிவுகளில் (Fission Product Wastes) சேகரித்துப் பயிற்சி பெறச் சில ஆண்டுகள் பிடித்தன.

அடுத்த கடினமான முறை அணு ஆயுதத் தரமுள்ள யுரேனியம் -235 உலோகத்தைச் சேகரிப்பது. பூமியில் கிடைக்கும் இயல் யுரேனியத்தில் பெருமளவு யுரேனியம் -238 உலோகமும் மிகச் சிறிதளவு (0.714%) யுரேனியம் -235 உலோகமும் கலந்துள்ளன. அணு ஆயுதத் தரமுள்ள எருவுக்கு (Weapon Grade Nuclear Fuel) சுத்தீகரித்துச் சேமிப்பான (> 90%) யுரேனியம் -235 தேவைப்படுகிறது ! அதாவது இயல் யுரேனியத்தைச் சுத்தீகரித்துப் பொடியாக்கிச் (Yellow Cake Powder UF6 ) சூடாக்கி வாயுவாக்க (UF6 Gas) வேண்டும். அந்த வாயு யுரேனியக் கலவைத் (Mixure of U-238 + U-235) திரும்பத் திரும்ப 1500 "சுழல்வீச்சு வடிகட்டி" யந்திரங்களில் (Separation By 1500 Centrifuge Machines) புகுத்தப்பட்டுப் படிப்படியாய் யுரேனியம் -235 திரட்டிச் சேமிக்கப் பட வேண்டும். முடிவில் யுரேனியம் ஆக்ஸைடாகி (UO2 Powder) அணு ஆயுதத் தரமுள்ள யுரேனியம் -235 உலோகமாகத் தயாரிக்கும் இந்த முறையும் அத்தனை எளிதில்லை.


Fig. 1D
Dr. A.Q. Khan &
His Nuclear Business


பாகிஸ்தான் எப்படி அணு ஆயுதத் தரமுள்ள எருக்களைப் பெற்றது ?

பாகிஸ்தான் விஞ்ஞானிகள் முதலில் புளுடோனியம் -239 உலோகத்தைப் பிரான்ஸ் அடுத்து பெல்ஜியம் நாடுகளிடமிருந்து வாங்க முயற்சி செய்தார்கள். முதலில் விற்க ஒப்புக் கொண்ட பிரான்ஸ் அமெரிக்காவின் தூண்டுதலால் மனம் மாறிப் பின்வாங்கி விற்க மறுத்து விட்டது. ஆனால் பெல்ஜியத்தில் மீள் சுத்தீகரிப்புத் தொழில் நுணுக்கப் (Fuel Reprocessing Technology) பயிற்சி பெறச் சில பாகிஸ்தான் பொறி நுணுக்க நிபுணர் சென்றனர். 1980 ஆண்டுகளில் அந்த அனுபவத்தை வைத்துப் பாகிஸ்தானில் புளுடோனியம் மீள் சுத்தீகரிப்பு முன்னோடித் தொழிற்கூடம் ஒன்றை நிறுவிட ஆரம்பித்தார். அந்தத் தொழிற்கூடம் 1998 இல் இயங்கத் தொடங்கி புளுடோனியம் பிரித்தெடுக்கப் பட்டு இரண்டு அல்லது நான்கு அணுக்குண்டுகள் தயாரிக்கும் ஆற்றல் பெற்றது.


Fig. 1E
Range of Warheads in the World


நெதர்லாந்தில் அடுத்து ஒரு விஞ்ஞானக் குழு யுரேனியம் -235 செழிப்பாக்கும் தொழிற்துறை நுணுக்கத்தைப் (Uranium Enrichment Plant) பயில முயன்றது. 1975 இல் நெதர்லாந்து யுரேனியச் செழிப்புத் தொழிற்சாலையில் அப்போது வேலை பார்த்த வந்த பாகிஸ்தான் உலோகத் துறையியல் நிபுணர் (Metallurgist) அப்துல் காதீர் கான் (Abdul Qadeer Khan) பாகிஸ்தான் பயிற்சிக் குழுவோடு சேர்ந்தார். அவரே வெகு சாமர்த்தியமாக நெதர்லாந்தின் யுரேனியச் செழிப்பூட்டும் தொழிற் துறையகத்தின் இரகசிய டிசைன், கட்டமைப்பு விளக்கத் தகவல், யந்திர சாதனக் குறிப்புகள், வரை படங்கள், யந்திரங்கள் தயாரிக்கும் நாடுகளின் பெயர்கள் அனைத்தையும் களவாடி பாகிஸ்தானுக்குக் கொண்டு வந்து விட்டார். 1979 ஆண்டு பாகிஸ்தானில் வெற்றிகரமாக நிறுவப் பட்டு இயங்கிய யுரேனியம் -235 செழிப்பூட்டும் தொழிற்கூடம் ஒன்று முதன்முதல் சிறிதளவு தயாரித்தது. அந்த ஆண்டுமுதல் அத்தொழிற்சாலை 20 முதல் 40 அணுக்குண்டுகள் தயாரிக்கும் தகுதியைப் பெற்றது.



Fig. 1F
From Uranium Ore to Bomb
Making


இந்திய அணு ஆயுதச் சோதனையில் புத்தர் புன்னகை செய்தாரா ?

“உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான்!” என்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் பார்த்திபனுக்கு ஓதிய ஒரு வேத மொழியை, நியூ மெக்ஸிகோ டிரினிடி (Trinity) பாலை வனத்தில் சரித்திரப் புகழ் பெற்ற முதல் சோதனை அணுகுண்டை 1945 ஜூலை 16 ஆம் தேதி வெடித்த போது, ராபர்ட் ஓப்பன்ஹைமர் (Robert Oppenheimer) உதாரணம் காட்டினார் ! அவர்தான் “ஓப்பி” (Oppie) என்று அழைக்கப்பட்டு அணுகுண்டு ஆக்கத் திட்டதுக்குத் தலைமை வகித்த ஒப்பற்ற விஞ்ஞான மேதை ! 1964 அக்டோபர் 21 இல் சைனாவின் முதல் அணு ஆயுதச் சோதனைக்குப் பிறகு, இந்திய அணுவியல்துறை அதிபர் டாக்டர் ஹோமி ஜெ. பாபா, “அரசாங்கம் ஆணையிட்டால் இந்தியாவும் 18 மாதங்களில் இது (சைனா அணு ஆயுத வெடிப்பு) போன்று அணு ஆயுத சோதனை செய்ய முடியும்” என்று வெளிப்படையாகவே அறிவித்தார்!



Fig. 1G
Indo-Pak Missile Status


1974 மே மாதம் 18 ஆம் தேதி இந்தியாவில் மாபெரும் ரயில்வே வேலை நிறுத்தம் உச்ச நிலையில் நாட்டை அமர்க்களப் படுத்திக் கொண்டிருந்த போது, விஞ்ஞானி டாக்டர் ராஜா ராமண்ணா இந்தியப் பிரதம மந்திரி இந்திரா காந்திக்கு, “புத்தர் புன்னகை செய்கிறார்” (The Buddha is Smiling) என்னும் குறிமொழியில் (Code Language) ஓர் அவசரத் தந்தியை அனுப்பினார்! அதன் உட்பொருள், பாரதம் தனது முதல் அணு ஆயுதச் சோதனையை ராஜஸ்தானின் பொக்ரான் பாலை வனத்தில் அடித்தள வெடிப்பாகச் செய்து வெற்றிகரமாக முடித்துள்ளது ! அந்த இனிய சொற்றொடர் அதன் பின் வந்த பல வெளியீடுகளின் தலைப்பாக எழுதப் பட்டு புகழ் பெற்றது ! இந்திய முதல் அணுகுண்டு சுமார் 8-12 கிலோ டன் டியென்டி (TNT) வெடிப்பு ஆற்றல் பெற்று, ஜப்பான் ஹிரோஷிமாவில் போட்ட முதல் அணு குண்டை விடச் சிறிதளவு ஆற்றல் குன்றியதாக இருந்தது ! அந்த அணு ஆயுதச் சோதனையை வெறும் “சாமாதான அணுகுண்டு வெடிப்பு” (Peaceful Nuclear Explosion) என்று இந்தியா பறை சாற்றினாலும், உலகில் எந்த நாடும் அதை ஏற்றுக் கொள்ள வில்லை ! அழிவு சக்தியின் தீவிரத்தைச் சோதிக்கப் பயன்படும் அணுகுண்டு எங்கே, எப்படி அமைதியைப் பரப்பிட முடியும் ?



Fig. 2
Indian Second Nuclear Tests
At Pokhran


இந்திய அணுகுண்டை ஆக்கிய அணுக்கரு ஆய்வுக் குழுவின் தலைமை விஞ்ஞானி டாக்டர் ராஜா ராமண்ணா ! இரண்டாம் உலகப் போரின் சமயம் அணு ஆயுத மன்ஹாட்டன் திட்டத்தின் (Manhattan Project) விஞ்ஞான அதிபதியாய்ப் பணிசெய்து முதல் அணுகுண்டு படைத்த ராபர்ட் ஓப்பன்ஹைமர் (Robert Oppenheimer), ரஷ்யாவின் முதல் அணு ஆயுதங்களைத் தோற்றுவித்த பீட்டர் கபிட்ஸா [Peter Kapitsa] ஆகியோர் வரிசையில், பாரதத்தின் அணுவியல் விஞ்ஞானி ராஜா ராமண்ணாவையும் அணு ஆயுதப் படைப்பு மேதையாய் நிற்க வைக்கலாம் !

இந்தியா அணு ஆயுத ஆக்கத்தில் இறங்கக் காரணங்கள் என்ன?

ஐந்து காரணங்களைக் கூறலாம்! முதல் காரணம், 1962 இல் சைனா இந்தியாவுடன் போரிட்டு வடகிழக்குப் பகுதியில் சில பரப்பு மலைப் பிரதேசங்களைப் பிடுங்கிக் கொண்டு போனது! இரண்டாவது, பிரதமர் நேரு 1964 மே 27 இல் காலமானது ! நேரு ஆக்க வினைகளுக்கு அணுசக்தி வளர வாய்ப்புக்களை ஏற்படுத்தினாலும், பாரதம் அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபடுவதை அறவே எதிர்த்தார். மூன்றாவது காரணம், சைரஸ் அணு ஆராய்ச்சி உலை (CIRUS Research Reactor) 1960 முதல் இயங்க ஆரம்பித்து, அணு ஆயுத எரு புளுடோனியம் அணுப்பிளவுக் கழிவு விளைவுகளில் உண்டானது !



Fig. 3
Indian Nuclear Sites


அடுத்து பிளவு விளைவுகளில் புளுடோனியத்தைப் (Plutonium in Fission Products) பிரித்தெடுக்கும் தொழிற்சாலை (Nuclear Spent Fuel Reprocessing Plant) ஓட ஆரம்பித்து, அணுகுண்டுக்கு வேண்டிய புளுடோனியம் திரளாகச் சேகரித்தது ! நான்காவது காரணம், சைனா 1964 அக்டோபர் 21 இல் தனது முதல் அணுகுண்டு வெடிப்புச் சோதனையைச் செய்து, அண்டை நாடான இந்தியாவின் நெஞ்சைத் துடிக்க வைத்தது ! ஐந்தாவது காரணம், அப்போது டாக்டர் ஹோமி ஜெ. பாபா, “அரசாங்கம் ஆணையிட்டால் இந்தியாவும் 18 மாதங்களில் இது போன்று (சைனா அணு ஆயுத வெடிப்பு) அணு ஆயுத சோதனை செய்ய முடியும்” என்று வெளிப்படையாகவே அறிவித்தது !

ஐந்து காரணங்களிலும் முக்கியமானது, ஐந்தாவது காரணம் ! டாக்டர் ஹோமி ஜெ. பாபா, “அரசாங்கம் ஆணையிட்டால், இந்தியாவும் 18 மாதங்களில் இது போன்று அணு ஆயுத சோதனைச் செய்ய முடியும்” என்று அரசாங்கத்தைத் தூண்டியது ! நேருவுக்குப் பின் வந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அணு ஆயுதத் தயாரிப்பை அவ்வளவாக வரவேற்க வில்லை. 1966 ஜனவரியில் அடுத்துப் பிரதமராய் வந்த இந்திரா காந்தி காலத்தில் ஹோமி பாபாவின் எண்ணம் தொடரப் பட்டிருக்கலாம்! அதே சமயம் டாக்டர் ஹோமி பாபா அகால மரணம் அடைந்து, அடுத்து டாக்டர் விக்ரம் சாராபாய் அணுசக்தித் துறையின் அதிபர் ஆனார்.


Fig. 4
Two Great Architects of India


சாராபாயும் அணு ஆயுத ஆக்கத்தை ஆதரிக்க வில்லை ! இறுதியில் அவரது மர்ம மரணத்திற்குப் (1971 டிசம்பர் 30) பின், ஹோமி சேத்னா அணுசக்தி ஆணையகத்துக்கு அதிபரானார். இந்திரா காந்தி, ஹோமி சேத்னா கண்காணிப்பின் கீழ், திறமை மிக்க அணுக்கரு பௌதிக (Nuclear Physicist) விஞ்ஞானி டாக்டர் ராஜா ராமண்ணாவின் நேரடிப் படைப்பில் இந்திய அணு ஆயுதங்கள் உருவாகின!

அணுக்குண்டு ஆக்குவதற்கு வேண்டிய புளுடோனியம், வேக நியூட்ரான் இயக்க (Fast Neutron Reactions) விளக்கங்களை அறிந்து கொள்வதற்குப் பூர்ணிமா-I (Purnima-I) ஆராய்ச்சி அணு உலை நிறுவப் பட்டு 1972 மே மாதம் 18 இல் இயங்க ஆரம்பித்தது ! இந்த அணு உலையின் எரு 43 பவுண்டு புளுடோனியம் -239 ! வெளிவரும் வெப்ப சக்தி 1 வாட் (watt). ஸைரஸ் ஆராய்ச்சி அணு உலை [CIRUS] 40 மெகா வாட் & துருவா ஆய்வு அணு உலை [Duruva] 100 மெகா வாட் வெப்ப சக்தியும் உண்டாக்கி அணு ஆயுத எரு புளுடோனியத்தைத் தொடர்ந்து உற்பத்தி செய்கின்றன ! துருவா 1985 ஆகஸ்டு 8 இல் இயங்கத் துவங்கியது ! ஆய்வு அணு உலை நாளொன்றுக்கு 1 மெகா வாட் (One Mega Watt for One Day) வெப்ப சக்தி ஈன்று இயங்கினால், பிளவு விளைவுகளில் (Fission Products) 1 கிராம் புளுடோனியம் -239 சேரும் ! 100 மெகாவாட் ஆற்றல் உடைய துருவ அணு உலை ஒரு நாள் இயங்கினால் (100 mwd), 100 கிராம் புளுடோனியம் கிடைக்கும் !



Fig. 5
CIRUS Research Reactor at
Mombai


அணு ஆயுதச் சோதனைகளைப் பற்றி ராமண்ணாவின் கருத்துக்கள்

“பொக்ரான் பாலை வனத்தில் 1998 மே மாதம் பாரதம் இரண்டாம் தடவை செய்த, ஐந்து அடித்தள அணு ஆயுதச் சோதனைகள் இந்திய துணைக் கண்டத்தின் பொருளாதாரம், சூழ்வெளி, பாதுகாப்பு, அரசியல், பொறியல் துறை போன்றவற்றை, ஏன் வாழ்க்கையைப் பற்றிய நமது எண்ணத்தைக் கூட மிகவும் பாதித்துள்ளது ! பல நாடுகள் இதற்கு முன் பல தடவைச் சோதனைகள் செய்து, உலகப் பெரு நகரங்கள் யாவற்றையும் அழிக்க வல்ல பேரளவில் அணு ஆயுதங்களைச் சேமித்து வைத்துள்ளன !

இந்த ஐந்து சோதனைகளால் உலக வல்லரசுகள் அதிர்ச்சி அடைந்து, அவை இந்தியாவுக்கு தீவிர எச்சரிக்கை விடுத்து, பயமுறுத்தியும் இருக்கின்றன ! இந்தியா நீண்ட காலப் போராட்டத்திற்குப் பின்பு எழுந்து நிற்கும் தனிச் சுதந்திர நாடு. இந்த நாள்வரை இந்தியா எந்த விதியையும் மீறியதும் இல்லை ! அகில நாட்டு உடன்படிக்கை எதையும் முறித்ததும் இல்லை ! உலக நாடுகள் தயாரித்த அணு ஆயுதப் பெருக்கத் தடுப்பு உடன்படிக்கை (Non-Proliferation Treaty NPT), அணு ஆயுதத் தகர்ப்பு (Nuclear Disarmament) ஆகியவற்றில் இந்தியாவுக்கு நம்பிக்கை இருக்கிறது.



Fig. 6
Dhurava Research Reactor at
Mombai


இந்த உடன்படிக்கையைத் தயாரித்த நாடுகள்தான் தமக்குச் சாதகமாகத், தமக்குப் பாதுகாப்பாக அணு ஆயுதங்களைப் பெருக்கிக் கொண்டும், அவற்றைச் சோதித்துக் கொண்டும் அதன் விதி முறைகளை முறித்துள்ளன! இந்தியா ஒரு நாடு மட்டுந்தான் அம்மாதிரிச் செயல்களை எதிர்த்து நிமிர்ந்து நிற்கிறது !

பழைய வரலாற்றை நினைவில் வைத்திருப்பவர்கள், இப்போது ஐக்கிய நாடுகளின் பேரவை (United Nations Organization) ஒரு பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டிருப்பதை நன்கு அறிவர் ! அதை ஐம்பெரும் வல்லரசுகள் ஆட்டி படைத்து, ஆக்கிரமித்துக் கைப்பிடிக்குள் வைத்துள்ளன! நல்வினைகள் புரிந்துள்ள அகில நாடுகளின் அணுசக்திப் பேரவையும் (International Atomic Energy Agency) இப்போது உலக நாடுகளின் அணுஉலை எருக்கள் உளவுகளைச் (Fissile Material Inspections) செய்வதிலும், அணுப்பிளவு எருக்கள் (Fissile Material Safeguards) பாதுகாப்பிலும் சிரமப் பட்டு வருகிறது !”



Fig. 7
Pokhran First Test Site


அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லும் ஏவுகணைத் திட்டம்

1983 இல் ஒருங்கிணைந்த கட்டளை ஏவுகணை வளர்ச்சித் திட்டம் (Integrated Guided Missile Development Program) உருவாகி, அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் கட்டளை ஏவுகணைகள் விருத்தி செய்யப் பட்டன ! அத்திட்டப்படி, ஐந்து வித ஏவுகணைகள் இந்தியாவில் அமைக்கப் பட்டன! சிறு தூர பிருதிவி (Short Range Prithvi), இடைத் தூர அக்னி (Intermediate Range Agni), தளத்திலிருந்து வானுக்குத் தாவும் ஆகாஷ் & திரிசூல் (Surface to Air Missiles, Akash & Trishul), கட்டளைப் பணியில் டாங்க்கைத் தாக்கும் நாகம் (The Guided Anti-Tank Nag). முதல் ஏவுகணை பிருதிவி, அணு ஆயுத மாடல் குண்டைச் சுமந்து 1988 பிப்ரவரி 25 இல் ஏவப்பட்டு, சோதனை வெற்றி கரமாக முடிந்தது !

இந்திய ஏவுகணைத் திட்டத்தின் அமைப்பாளி (Architect of the Indian Missile Program) டாக்டர் அப்துல் கலாம் (2002 இல் இந்திய ஜனாதிபதி), இந்தியப் பாதுகாப்பு, ஆய்வு வளர்ச்சி நிறுவகத்தின் (Indian Defence & Research Development Organization) தலைவர். அவர் கூறியது: “கட்டளை ஏவுகணை ஆயுத மயமாக்கல் (Weaponization) முழுமையாக முடிக்கப் பட்டது. பிருதிவி, அக்னி ஆகிய ஏவுகணைகள் தூக்கிச் செல்ல இருக்கும் அணு ஆயுதப் போர்க் குண்டுகளின் (Nuclear Warheads) அளவு, எடை, தூண்டும் முறை, இயங்கும் ஒழுங்கு, அதிர்வுகள் (Performance, Vibrations) யாவும் சோதிக்கப் பட்டு விட்டன!”



Fig. 8
Pokhran Test Results


1998 மே மாதம் பிரதமர் பாஜ்பாயி வெளிப்படையாகப் பறை சாற்றினார்: “இந்தியா இப்போது ஓர் அணு ஆயுத நாடு (Nuclear Weapon State) ! மனித இனத்தின் ஆறில் ஒரு பங்கான பாரத மக்களின் உரிமைக்குரிய ஆயுதங்கள்! இவை யாவும் சுயப் பாதுகாப்புக்கு (Self Defence) மட்டுமே பயன்படும் ஆயுதங்களே தவிர முன்னடியாக யாரையும் தாக்குவதற்குப் பயன்படுத்தப் பட மாட்டா !”

இந்தியா பன்முகக் கலாச்சார நாடாக, பல்வேறு மதச் சார்பான தேசமாக, எண்ணற்ற இனங்களின் சங்கமமாக இருந்து, வகுப்புக் கலவரங்கள் அடிக்கடி எழும்போது கட்டுப்படுத்த இயலாத கூட்டரசினர் கைவசம் இருப்பதாலும், பாகிஸ்தான், சைனா போன்ற பகை நாடுகளுக்கு இடையே பாரதம் நெருக்கப் படுவதாலும் என்றாவது ஒருநாள், யாராவது ஒரு பிரதமர், எந்த நாட்டின் மீதாவது அணு ஆயுதத்தை வீசிக் கதிரியக்கப் பொழிவுகளை உலகில் பரப்பப் போகும் பயங்கரக் காலம் ஒருவேளை வரலாம் ! அந்த காட்டுப் பாதைக்குப் பாரதத்தில் சிவப்புக் கம்பளம் விரித்த விஞ்ஞானி, டாக்டர் ராஜா ராமண்ணா என்னும் ஓர் வன்மொழி வாசகம் கால வெள்ளம் அழிக்க முடியாதபடி, உலக வரலாற்றில் கல்வெட்டு போல் எழுதப்பட்டு விட்டது !



Fig. 9
Dr. Abdul Kalam
Rocket Scientist


உலக விஞ்ஞானிகளுக்கும், அரசுகளுக்கும் ஓர் வேண்டுகோள்!

1955 ஆகஸ்டு 25 ஆம் தேதி பிரிட்டிஷ் விஞ்ஞானி, டாக்டர் ஜெ. பிரனோஸ்கி (Dr. J. Bronowski) அகில நாடுகளின் அமைதி நிலைநாட்டுப் பேரவையில் பேசும் போது, “எனது ஆணித்தரமான கொள்கை இது ! ஒவ்வொரு விஞ்ஞானியும் தனது தனித்துவ மனச்சாட்சியைப் பின்பற்ற வேண்டும். அது அவரது கடமை. இதில் அரசாங்கத்தின் கடமை என்ன? ஒரு விஞ்ஞானி தன் மனச்சாட்சிக்கு எதிராகப் பணி செய்ய மறுத்தால், அவரை அரசாங்கம் தண்டிக்கக் கூடாது! விஞ்ஞானிகள் தமக்கு விருப்பம் இல்லா ஆராய்ச்சில் இறங்க மாட்டோம் என்று மறுத்தால் விட்டுவிடும் ஒரு சூழ்நிலையை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் !” என்று பறை சாற்றினார்.

1957 மே மாதம் நோபெல் பரிசு விஞ்ஞானி லினஸ் பாலிங் (Linus Pauling) அமெரிக்க விஞ்ஞானிகளின் ஒரு கோரிக்கையில் உலக அரசுகளையும், நாட்டு மக்களையும் வலியுறுத்தி ஓர் உடன்படிக்கை மூலம், எல்லா அணு ஆயுதச் சோதனைகளையும் உடனே நிறுத்தும்படி விரைவு படுத்தினார். 1957 ஜூன் மாதத்திற்குள் 2000 அமெரிக்க விஞ்ஞானிகள் சேர்ந்து கையெழுத்திட்டு ஓர் விண்ணப்பத்தை ஜனாதிபதி ஐஸன்§†¡வருக்கு அனுப்பினார்கள்! “ஒவ்வோர் அணுகுண்டுச் சோதனையும் உலகின் எல்லா மூலை முடுக்கிலும் கதிரியக்கப் பொழிவுகளை அடுக்கிக் கொண்டே போகிறது! அதிமாகும் ஒவ்வோர் அளவு கதிர்வீச்சும் மனித இனத்திற்கு ஆரோக்கியக் கேடுகளை உண்டாக்கிக் கொண்டே போகிறது! முடிவில் அங்க ஈனமான குழந்தைகள் எதிர்காலத்தில் பிறந்து, அவர்களின் எண்ணிக்கை பெருகப் போகிறது !”




Fig. 10
Indian Missile Launch


அத்தனைக் கூக்குரல் அறிவிப்புகள் உலக விஞ்ஞானிகளுக்கும், அரசாங்கத்திற்கும் முறையிடுவது என்ன ? அழுத்தமான இந்த உபதேசம்தான் ! போதும் நிறுத்துவீர், அணு ஆயுதச் சோதனைகளை! போதும் நிறுத்துவீர், அணு ஆயுத உற்பத்திகளை! போதும் தகர்த்து ஒழிப்பீர், கைவசமுள்ள அணு ஆயுதக் குண்டுகளை ! உலக ஒலிம்பிக்கில் அணு ஆயுதப் பெருக்குப் பந்தயப் போட்டி இனிமேல் தொடரக் கூடாது.







Fig. 1
The Merchant of Menace


உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான் !

கிருஷ்ண பரமாத்மா (பகவத் கீதை)

"ஒருவருக்குப் பின்னால் ஒருவராக யாரெனக் காண முடியாத தோற்றத்தில் மக்கள் பலர் ஓடினர் ! அவரது தோலுரிந்து கைகளிலிருந்தும், கன்னங்களிலிருந்தும் தொங்கிக் கொண்டிருந்தன ! முகமெல்லாம் சிவந்து உப்பிப் போய் எங்கே கண்கள் உள்ளன, எங்கே வாய் உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள முடியாதவாறு கடினமாக இருந்தது."

ஹிரோஷிமா அணு ஆயுதப் பிழைப்பாளி

"நான் கதிர்வீச்சு நோய்களால் திரும்பத் திரும்ப பத்துத் தடவைகள் மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டேன். மூன்று தடவைகள் (சாகக் கிடந்து) என் குடும்பத்தினர் அழைக்கப்பட்டு என் படுக்கை அருகிலே இருந்தனர். மரணத்தோடு போராடிப் போராடி நான் மெய்வருந்திக் களைத்துப் போய் விட்டேன்."

ஹிரோஷிமா அணு ஆயுதப் பிழைப்பாளி ஸனாவோ சுபாய் (Sanao Tsuboi)

"முஸ்லீம்களாகிய நாம் வல்லவராகவும், நம் நாடு மற்ற நாடுகளுக்கு இணையாகவும் இருக்க வேண்டும். அதனால்தான் சில நாடுகள் வல்லமையோடு இருக்க நான் உதவி செய்ய விரும்புகிறேன்,"

அப்துல் காதீர் கான் (Abdul Qadeer Khan, Maker of Pakistan Atomic Bomb)

"இந்தியா ஓர் அணு ஆயுதத்தைத் தயாரித்தால் பாகிஸ்தான் புல்லைத் தின்றோ இலைகளைத் தின்றோ பட்டினி கிடந்து அதைத் தானும் பின்பற்றிச் செய்யும்."

ஸ¤ல்·பிகார் அலி புட்டு (Zulifikhar Ali Bhuttu) பாகிஸ்தான் வெளிநாட்டு அமைச்சர்.

“அரசாங்கம் ஆணையிட்டால் இந்தியாவும் 18 மாதங்களில் இது (சைனா அணு ஆயுத வெடிப்பு) போன்று அணு ஆயுத சோதனை செய்ய முடியும்.”

டாக்டர் ஹோமி ஜெ. பாபா (அணுசக்திப் பேரவை முதல் அதிபர்) (1964)


Fig. 1A
Nuclear Shopping in Pakistan


உலக நாடுகளின் அணு ஆயுதக் கையிருப்பு ஆற்றல்கள்

இப்போது உலக அணு ஆயுத வல்லமை கொண்ட நாடுகள் கைவசமுள்ள அணு ஆயுத வெடிக் குண்டுகளின் எண்ணிக்கையை அறிந்தோமானால் இன்னும் அத்தனை ஆயுதங்கள் உயிரனத்தை அழிக்க விழித்துள்ளன என்பதை நாம் கண்டு வியப்புறுவோம். அமெரிக்காவின் அணு ஆயுதக் குண்டுகளை ஏந்தியுள்ள கட்டளை ஏவுகணைகள் ரஷ்யாவையோ மற்ற பகை நாடுகளையோ குறிவைத்துப் பல திசைகளில் பல்வேறுச் சாதன முறைகள் மூலம் தாக்கப் பதுக்கி வைக்கப் பட்டுள்ளன. 1991 இல் சோவியத் யூனியன் கவிழ்ந்து வல்லரசுக்களுக்கு இடையே இருந்த ஊமைப் போர் மறைந்த பிறகும் உச்ச வல்லமை படைத்த அமெரிக்கா இன்னும் 10,000 (2007 ஆண்டு வரை) அணு ஆயுதப் பேரழிவுக் குண்டுகளை வைத்துக் கொண்டு கண்காணித்து வருகிறது ! ரஷ்யா தன் கைவசம் 15,000 (2007 ஆண்டு வரை) அணு ஆயுதக் குண்டுகளைப் பதுக்கி வைத்துள்ளது. பிரான்ஸ் 350, பிரிட்டன் 200, சைனா 200, இஸ்ரேல் 80, பாகிஸ்தான் 60, இந்தியா 50, வட கொரியா பத்துக்குக் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் (2007 மதிப்பீடுகள்) அணு ஆயுதக் குண்டுகள்,





தற்போதைய அச்சம் ஏற்கனவே நாமறிந்த அணு ஆயுதக் குண்டுகள் அல்ல. தொல்லை தரவல்ல மூர்க்க வர்க்கம் களவாடி அவரது கைவசம் அகப்படும் "புழுதிக் குண்டுகள்" எனப்படும் கதிர்வீச்சுக் குண்டுகளே (Radioactive Dirty Bombs) OR (Radiological Dispersion Bombs) ! இவ்வகை அணுவியல் குண்டுகள் சாதாரண ரசாயன வெடிகளைப் பயன்படுத்திக் கதிரியக்கப் பொழிவுகளைச் சிறிதளவு தரைமீது (200 சதுர மைல்) பரப்பச் செய்யும். புழுதிக் குண்டுகளில் பொதுவாக இருப்பவை : ஸ்டிரான்சியம்-90 (Strontium-90), கோபால்ட்-60 (Cobalt-60) அல்லது சீஸியம்-137 (Cesium-137). புழுதிக் குண்டுகள் வீரிய கதிரியக்கமுள்ள காமாக் கதிர்வீச்சைத் தளமெங்கும் பரப்பும். இந்தப் புழுதிக் குண்டுகளை எளிதாக யாரும் தயாரிக்க முடியும். தேவையானவை : சாதாரண வெடி மருந்து அடுத்து கதிரியக்க உலோகம் ஏதாவது ஒன்று : ஸ்டிரான்சியம்-90 (Strontium-90), கோபால்ட்-60 (Cobalt-60) அல்லது சீஸியம்-137 (Cesium-137). இவற்றைக் காமாக் கதிர்ப் படங்கள் எடுக்கும் (Radio-graphy) தொழிற் கூடங்களில் அல்லது அணு உலைக் கூடங்களில் களவாட வேண்டும்.


Fig. 1C
House Arrest & Release of Dr. Khan


இப்போது அமெரிக்காவும், ரஷ்யாவும் ஒருவருக் கொருவர் பணிந்து தணிந்து மாஸ்கோ அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தப்படி [Moscow Treaty - Strategic Offensive Reductions Treaty (SORT)] தமது அசுர வல்லமையுள்ள அணு ஆயுதச் சேமிப்புகளை முதன் முதலாகக் குறைத்துக் கொள்ள உடன்பட்டிருக்கின்றன. அந்த அமெரிக்க-ரஷ்ய உடன்படிக்கைப்படி 2012 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் அமெரிக்காவும், ரஷ்யாவும் தமது இயக்க அணுவெடி ஆயுதங்களை (1700 -2200) எண்ணிக்கைக்கு இடையில் குறைத்துக் கொள்ள வேண்டும். (Each Party shall reduce and limit strategic nuclear warheads, as stated by the President of the United States of America on November 13, 2001 and as stated by the President of the Russian Federation on November 13, 2001 and December 13, 2001 respectively, so that by December 31, 2012 the aggregate number of such warheads does not exceed 1700-2200 for each Party. Each Party shall determine for itself the composition and structure of its strategic offensive arms, based on the established aggregate limit for the number of such warheads.) அமெரிக்காவின் அணு ஆயுதங்களில் சில மாடல்கள் (W-76 Model Warheads -100 kiloton TNT Capacity) தமது 30 ஆண்டு ஆயுட் காலத்தைக் கடந்து விட்டதால் அவற்றை ஏனோ புதுப்பிக்க அமெரிக்கா இப்போது ஈடுபட்டுள்ளது.


Fig. 1D
Pakistan A-Bomb Scientists


அணு ஆயுத வணிகம் செய்த அப்துல் காதீர் கான்

2008 மே மாதம் அளித்த நேர்முக உரையாடலில் டாக்டர் அப்துல் காதீர் கான் தனது முந்தைய குற்ற ஏற்பில் கூறியவற்றை மாற்றி ஈரான், வட கொரியா நாடுகளுக்கு அணு ஆயுத உற்பத்திக்கு உதவி புரிந்ததாக ஒப்புக் கொண்டார். மேலும் அப்போதைய பாகிஸ்தான் ஜனாதிபதி பெர்வெஸ் முஷார·ப் தேசீய நலனுக்காகத் தன்னை ஒருப் பலி ஆடாக இருக்கக் கட்டாயப் படுத்தியதாகவும் கூறினார் ! அத்துடன் உலக நாடுகள் சில அணு ஆயுதப் பெருக்கத்தில் ஈடுபடக் காரணமானவர் ஜனாதிபதி முஷார·ப்தான் என்றும் குறிப்பிட்டார். அணு ஆயுத யுரேனிய எருவைச் சேமித்துத் திரட்டும் சுழல்வீச்சு வடிகட்டிச் சாதனங்கள் (Centrifuge Equipment to Prepare Weapon Grade Uranium -235) பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் மேற்பார்வையில் பாகிஸ்தானிலிருந்துதான் ஒரு விமானத்தின் மூலம் வட கொரியாவுக்கு அனுப்பப் பட்டன என்றும் வெளிப்படையாகக் கூறினார். மேலும் 1999 ஆம் ஆண்டில் தான் ஒரு பாகிஸ்தான் இராணுவ ஜெனரலோடு வட கொரியாவுக்குச் சென்று தோள் மீதிருந்து ஏவும் ஏவுகணைகளை (Shoulder-Launched Missiles) வாங்கச் சென்றதாகவும் ஒப்புக் கொண்டார். அவரது குற்ற ஏற்புகளால் வெகுண்ட அமெரிக்க அரசாங்கம் தூண்டி டாக்டர் கான் பாகிஸ்தான் அணுசக்தி ஆணையகத்திலிருந்து நீக்கப் பட்டு "இல்லச்சிறைக் கைதியாய்" அடைக்கப் பட்டார். பிப்ரவரி 6, 2009 இல் இஸ்லாமாபாத் உயர்நீதி மன்றம் ஆணையிட்டபடி டாக்டர் கானை இல்லச் சிறையிலிருந்து விடுதலை யானார்.


Fig. 1E
Dr. Khan the Nuclear Bomb Hero


பாகிஸ்தானின் அணுக்குண்டு பிதா எனப்படும் அப்துல் காதீர் கான் ஏப்ரல் 27, 1936 தேதி (பிரிட்டிஷ் இந்தியாவில்) போபால் நகரில் பிறந்தார். 1947 பிரிவினைக்குப் பிறகு இல் கான் குடும்பம் இந்தியாவி லிருந்து பாகிஸ்தானுக்குப் புலம்பெயர்ந்தது. கராச்சி பல்கலைக் கழகத்தில் 1960 இல் B.Sc பட்டம் பெற்றார். 1961 இல் உலோகவியல் படிக்க மேற்கு ஜெர்மனிக்குச் சென்று 1967 இல் பொறியியல் பட்டத்தைப் பெற்றார். அடுத்து நெதர்லாந்தில் உள்ள டெல்·ப்ட் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து உலோகவியல் பொறியியலில் Ph. D. (Metallugical Engineering) பட்டத்தையும் பெற்றார்.

1972 இல் டாக்டர் கான் நெதர்லாந்து பௌதிக ஆய்வுக் கூடத்தில் (Physical Dynamics Research Laboratory, Amsterdam, Netherlands) சேர்ந்து யுரேனியம் செழிப்பூட்டும் அணுவியல் கூடத்தில் (Uraniuam Enrichment Facility at Almelo, Netherlands) பணி செய்தார். அணுமின் சக்தி நிலையங்களுக்கு செழிப்பு யுரேனியத்தைத் தயாரிக்க அந்த ஆய்வுக் கூடத்தை 1970 இல் கட்டி முடித்தவை மூன்று நாடுகள் : பிரிட்டன், மேற்கு ஜெர்மனி & நெதர்லாந்து. யுரேனியம் ஹெக்ஸா ·புளூரைடு வாயுவிலிருந்து (Uranium Hexafluoride Gas) அணு ஆயுதத் தரமான யுரேனியம் -235 எருவைத் தயாரிக்க 1500 சுழல்வீச்சு வடிகட்டிகள் (Centrifuges) தேவைப்படும்.


Fig. 2
European Equipment Suppliers -1


அவற்றில் யுரேனியம் -238 & யுரேனியம் -235 ஆகிய இரண்டு ஏகமூலக்களும் (Isotopes of Uranium) 100,000 rpm (Revolutions per minute) வேகத்தில் சுற்றப்பட்டு யுரேனியம் -235 படிப் படியாக சேமிப்பாகிப் பிரித்தெடுக்கப் படும். அணு ஆயுதத் தரமான யுரேனியம் -235 தயாரிப்பு முறைகள், மற்றும் யந்திர சாதனங்கள் யாவும் ஐரோப்பிய நாடுகளில் மிகவும் பாதுகாப்பாகவும் இரகசியமாகவும் வைத்திருக்கப் படுபவை !

1974 மே மாதம் 18 ஆம் தேதியில் இந்தியா "புத்தர் புன்னகை புரிகிறார்" (Bhuddha Smiling) என்னும் இராணுவக் குறிச்சொல் கொண்ட தனது முதல் அணு ஆயுதச் சோதனையைச் செய்து உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியது ! பாகிஸ்தானைப் பைத்திய நாடாக்கியது ! டாக்டர் கான் "புத்தர் புன்னகை புரிந்தது பாகிஸ்தானின் மரணத்தை எதிர்நோக்கி" என்று கொதித்தெழுந்தார் ! 1975 டிசம்பரில் டாக்டர் கான் வாயுச் சுழல்வீச்சு வடிகட்டிப் படங்களைக் (Gas Centrifuge Blueprints) மற்றும் தயாரிப்பு முறைகளையும் களவாடிக் கொண்டு நெதர்லாந்தை விட்டுப் பாகிஸ்தானுக்கு பறந்து வந்தார் ! டச் அரசாங்க ஒற்றர் பின்னர் செய்த ஒற்றில் மிகவும் இரகசியாமான யுரேனியம் -235 சேமிப்புத் தகவல் பாகிஸ்தானி வலைக் குழு ஒற்றர் மூலமாகக் களவாடப் பட்டது என்று தெரிய வந்தது !



Fig. 3
European Equipment Suppliers -2


டாக்டர் கான் அப்போதைய முதன் மந்திரி ஸ¤ல்·பிகார் அலி புட்டுவுடன் நட்புறவு கொண்டிருந்தார். 1974 இல் இந்தியா தனது முதல் அணு ஆயுதத்தைச் சோதித்த பிறகு, டாக்டர் கான் பாகிஸ்தான் அரசாங்க அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அதன் அணு ஆயுத முயற்சிக்குத் தான் உதவுதாக முன்வந்தார். 1998 மே மாதம் 11 இல் இந்தியாவின் இரண்டாவது அணு ஆயுதச் சோதனைகள் பொரொன் பாலை நிலத்தில் நிகழ்ந்த பிறகு பாகிஸ்தானின் முதல் அணு ஆயுதச் சோனைகள் 1998 மே மாதம் 28 (யுரேனியம் -235 அணுக்குண்டு) & 30 (புளுடோனியக் குண்டு) தேதிகளில் இரண்டு முறைச் சோதனைகள் செய்து காட்டப் பட்டன.

பாகிஸ்தான் அணு ஆயுதங்களுக்கு அன்னிய நாடுகளின் ஒத்துழைப்பு

பாகிஸ்தான் அணுவியல் விஞ்ஞானிகள் திடீரெனச் செய்து காட்டிய செழிப்பு யுரேனிய அணுக்குண்டு, புளுடோனிய அணுக்குண்டு வெடிப்புகள் இரண்டும் உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தி ஐயமுறச் செய்தன. அத்தகைய விரைவான அணு ஆயுதத் தயாரிப்புகள் சில அன்னிய நாடுகளின் கூட்டு ஒத்துழைப்பின்றி நிகழ முடியாதென்று சந்தேகங்கள் உண்டாயின ! 1980 ஆண்டுகளில் சைனாவின் தொழில் நிபுணர்கள் பாகிஸ்தான் அணுவியல் ஆய்வுக் கூடங்களில் உலவியதாகத் தெரிகிறது ! 1983 இல் டச் அரசாங்கம் யுரேனியச் செழிப்பு முறைப்பாடுச் சாதனங்களைக் களவாடி ஓடிப்போன டாக்டர் கான் மீது வழக்குத் தொடர்ந்து ஆம்ஸ்டர்டாம் சிறையில் நாலாண்டுகள் தள்ள ஆணை இட்டது ! ஆனால் அப்போது பாகிஸ்தானில் இருந்த குற்றவாளி கானை டச் அரசாங்கம் கைது செய்ய முடியாமல் போனது !



Fig. 4
European Equipment Suppliers -3


1987 இல் பிரிட்டீஷ் தின இதழ், 'பாகிஸ்தான் அணு ஆயுதத் தயாரிப்பு நிபுணத்தை டாக்டர் கான் வெளியே இருந்து எடுத்து வந்ததாய்', ஒப்புக் கொண்டதாக அறிவித்தது. ஆனால் 1990 இல் டாக்டர் கான் பாகிஸ்தானி தகவல் அறிவிப்பாளருடன் உரையாடும் போது "நாங்கள் அன்னிய நாடுகளிலிருந்து எந்த மூலத் தகவலை அறியவில்லை" என்றும், "அணுவியல் நூல்கள், மாத இதழ்கள், ஆராய்ச்சி வெளியீடுகளைப் பயன்படுத்தினோம்," என்றும் வெளிப்படையாகக் கூறினார் ! 1991 இல் பாகிஸ்தான் தினச்செய்தி இதழ் 'டான்' (Dawn) டாக்டர் கான் தான்தான் அணு ஆயுதத் தயாரிப்புக்குக் காரண கர்த்தா வென்று பெருமைப் பட்டுக் கொண்டதாக அறிவித்தது.

அணு ஆயுதச் சாதனங்களைப் பாகிஸ்தான் தயாரிக்க பல்வேறு ஐரோப்பிய நாடுகள் தெரிந்தோ தெரியாமலோ உதவி செய்ய முன்வந்ததாக அறியப்படுகிறது. நெதர்லாந்தில் டாக்டர் கான் 1970 ஆண்டுகளில் சுழல்வீச்சு வடிகட்டிகள் டிசைன், அமைப்பு முறைகளை முதலில் களவாடிப் பாகிஸ்தானுக்குக் கொண்டு வந்தார். அந்த நிபுணத்தை முதலில் பாகிஸ்தானுக்கும், பிறகு ஈரான், லிபியா, வட கொரியா நாடுகளுக்கும் அவர் பயன்படுத்தியாக அறிய வருகிறது. நெதர்லாந்தில் செழிப்பு யுரேனிய ஆய்வுக்கூடம் கட்டிக் கொடுத்த பிரிட்டன் டாக்டர் கானுக்கு இருபதாண்டுகள் உபரிச் சாதனங்கள் (Centrifuge Parts & Spare Parts) அனுப்ப ஒப்பி வந்திருக்கிறது.



Fig. 5
Weapon Grade Materials -1


பாகிஸ்தான் அணு ஆயுதம் தயாரிக்க செழுப்பு யுரேனியம் சேமிக்கத் தேவையான நுணுக்க சூனியமாக்கும் பம்ப்புகளை (Vacuum Pumps) ஜெர்மன் வர்த்தகக் கம்பேனி ஒன்று செய்து அனுப்பி இருக்கிறது. ஸ்பெய்னில் உள்ள ஒரு தொழிற்சாலை இடைத் தரகர் மூலமாக லேத் யந்திரங்களைப் (Lathe Machines for Enrichment Plant) பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளது. மொராக்கோவில்தான் டாக்டர் கான் வெளிநாட்டு நிபுணர்களைச் (ஈரான், லிபியா, வட கொரியா மற்றும் சாதனம் தயாரிபாளரை) சந்தித்து கூட்டுழைப்புப் பணிகளைச் செய்திருக்கிறார். மலேசியாவில் உள்ள ஸ்கோமி நுணுக்கத் தொழிற்சாலையில்தான் (Scomi Precision Engineering Company) எல்லா நாடுகளுக்கும் வேண்டிய 25,000 சுழல்வீச்சு வடிகட்டிகள் (Centrifuges) தயாரிக்கப் பட்டுள்ளன ! வட கொரியா நாட்டுக்கு மட்டும் டாக்டர் கான் குறைந்தது 12 தடவைகள் நேராகப் பிரயாணம் செய்திருப்பதாகத் தெரிகிறது ! அதன் பிரதிபலனாக வட கொரியா தனது கட்டளை ஏவுகணைகளைப் பாகிஸ்தானுக்குக் கொடுத்திருப்பதாகவும் பின்னால் அறிய வருகிறது.



Fig. 6
Weapon Grade Materials -2


1980 -1990 ஆண்டுகளில் அணு ஆயுதத் தயாரிப்பு மற்றும் கட்டளை ஏவுகணைத் தயாரிப்பு சம்பந்தமாக 'பாகிஸ்தான் சைனா வட கொரியா' நாடுகளுக்குள் கூட்டுழைப்பு நிகழ்ந்து வருவதாக மேற்திசை நாடுகளுக்குள் ஓர் உறுதியான எண்ணம் வலுத்தது ! அமெரிக்க நாளிதழ் 'வாஷிங்டன் போஸ்ட்' (Washington Post) 1980 ஆரம்ப ஆண்டுகளில் அமெரிக்க ஒற்றர் டாக்டர் கானின் விமானப் பயணப் பெட்டியை உளவிச் சோதித்து சைனா பேஜிங்கிலிருந்து ஹிரோஷிமா மாடல் அணு ஆயுதம் போன்ற சில வரைப்பட விபரங்கள் இருந்ததைக் கண்டுபிடித்து அணு ஆயுதத் தயாரிப்புக்குச் சைனாவின் கூட்டுழைப்பு உள்ளதை முதன்முறை உறுதியாக அறிந்ததாக வெளியிட்டது !

இத்தகைய பயங்கர அணு ஆயுதக் குண்டுகளைப் பலநாடுகள் தயாரிக்கக் காரணமாக இருந்த டாக்டர் கான் இப்போது பாகிஸ்தானில் ஒரு கோடிஸ்வரன் என்பதைச் சொல்லத் தேவையில்லை ! அவருக்கு உதவியாகப் பணி செய்த பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் பலரும் பணம் திரட்ட பயங்கர வேலைகள் செய்து வந்திருக்கிறார். இந்த இரகசிய வேலைகளில் முன்னாள் ஜனாதிபதி முஷார·ப் அனுமதி இல்லாமல் பல்லாயிரம் டாலர் நிதித் திணிப்பின்றி ஈரான், வட கொரியா நாடுகளில் அணு ஆயுதப் பெருக்கம் பரவி இருக்குமா ?



Fig. 7
Sick Survivers Radiation Hazard


ஆனால் பாகிஸ்தான் அணு ஆயுதத் தயாரிப்புக்கும், வட கொரியா கட்டளை ஏவுகணைகளைக் கொடுத்ததற்கும் தேவைப்படும் மில்லியன் கணக்கான டாலர்களை வருடா வருடம் யார் கொடுத்து வந்திருகிறார் என்று நினைக்கிறீர்கள் ? பாகிஸ்தானின் ஆழ்ந்த தோழமை கொண்ட உலக வல்லரசுகளில் உச்ச வல்லரசான அமெரிக்க நாடுதான் !



Fig. 8
Radiation Dose Levels


கதிர்வீச்சடி அளவுகளும் அதனால் விளையும் உயிரினப் பாதிப்புகளும்
Ionizing Radiation Dose Level Examples
Recognized effects of acute radiation exposure are described in the article on radiation poisoning. The exact units of measurement vary, but light radiation sickness begins at about 50–100 rad (0.5-1 gray (Gy), 0.5-1 Sv, 50-100 rem, 50,000-100,000 mrem). Although the SI unit of radiation dose equivalent is the sievert, chronic radiation levels and standards are still often given in millirems, 1/1000th of a rem (1 mrem = 0.01 mSv)




உலக விஞ்ஞானிகளுக்கும், அரசுகளுக்கும் ஓர் வேண்டுகோள்!

1945 ஜூன் 11 ஆம் தேதி மன்ஹாட்டன் முதல் அணுகுண்டு திட்டத்தில் பணி செய்த நோபெல் பரிசு விஞ்ஞானி, ஜேம்ஸ் பிராங்க் (James Frank) தலைமையில் சிகாகோவின் பல விஞ்ஞானிகள் ஜப்பான் மீது போட விருக்கும் அணுகுண்டால் நேரப் போகும் கோர விளவுகளை முதலிலே தடுக்க முயற்சி செய்தனர். அணுகுண்டுக்குப் பதிலாக வேறு ஒரு குண்டைத் தயாரித்துப் போட, அந்த விஞ்ஞானிகள் அமெரிக்க யுத்தச் செயலாளருக்குக் (Secretary of War) கடிதம் எழுதினார்கள் ! இறுதியில் ஜப்பானில் அமெரிக்கா என்ன செய்தது என்று நாமெல்லாம் அறிவோம் !

1945 ஜூலை 17 ஆம் தேதி டாக்டர் லியோ ஸிலார்டு (Dr. Leo Szilard) தலைமையில் 63 விஞ்ஞானிகள் கையெழுத்திட்ட ஓர் விண்ணப்பத்தை அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன் (President Truman) அவர்களுக்கு அனுப்பினர். ஜப்பான் மீது அமெரிக்கப் போர்ப்படை போட விருக்கும் அணு ஆயுதங்களால் விளையப் போகும் கதிரியக்கப் பொழிவுகளின் கோர அழிவுகள் போர் ஒழுக்கத்திற்கு முற்றிலும் எதிரானவை என்று அழுத்தமாய் எழுதி யிருந்தார்கள் ! லியோ ஸிலார்டுதான் முதன் முதலில் அணுகுண்டு ஆக்க, அமெரிக்க ஜனாதிபதிக்குக் கடிதம் எழுத, ஐன்ஸ்டைனைத் தூண்டியவர் !


Fig. 9
Biological Hazards


1955 ஆகஸ்டு 25 ஆம் தேதி பிரிட்டிஷ் விஞ்ஞானி, டாக்டர் ஜெ. பிரனோஸ்கி (Dr. J. Bronowski) அகில நாடுகளின் அமைதி நிலைநாட்டுப் பேரவையில் பேசும் போது, “எனது ஆணித்தரமான கொள்கை இது! ஒவ்வொரு விஞ்ஞானியும் தனது தனித்துவ மனச்சாட்சியைப் பின்பற்ற வேண்டும். அது அவரது கடமை. இதில் அரசாங்கத்தின் கடமை என்ன? ஒரு விஞ்ஞானி தன் மனச்சாட்சிக்கு எதிராகப் பணி செய்ய மறுத்தால், அவரை அரசாங்கம் தண்டிக்கக் கூடாது! விஞ்ஞானிகள் தமக்கு விருப்பம் இல்லா ஆராய்ச்சில் இறங்க மாட்டோம் என்று மறுத்தால் விட்டுவிடும் ஒரு சூழ்நிலையை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் !” என்று பறை சாற்றினார்.





ஆரமாய்
Fig. 1
Atomic Weapons Produce
Nuclear Winter
அணிவிக்க லாமா ?
உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான் !
கிருஷ்ண பரமாத்மா (பகவத் கீதை)
விஞ்ஞானிகள் உலக தேச நலனை முன்வைத்து அதிர்ச்சியான இந்தக் கோரப் பிரச்சனையில் (அணு ஆயுத வெடிப்பு) தெளிந்த சிந்தனையோடு நடந்து கொண்டனரா என்று ஒருவர் கேட்க வரலாம் ! உண்மையாக அப்படி ஒரு விருப்பத் தேர்வுக்கு (Choice) இடமில்லை ! அடிப்படை ஆய்வறிவு கிடைத்ததும் அது கனியாகப் பழுப்பதை நிறுத்த எந்த ஓர் எதிர்ப்புத் தடையும் வந்தால் பரிதியைச் சுற்றிவரும் பூமியை நிறுத்த முனைவது போல் முறிந்து போகும் !
சிகாகோவில் முதல் அணுப்பிளவு தொடரியக்கம் நிகழ்த்திய என்ரிக்கோ ·பெர்மி,
விஞ்ஞானம் அணுசக்தி மூலம் பயனடைய நமக்குக் கல்வி புகட்டியுள்ளது. மனிதத் தீங்குகளுக்குப் பதிலாக மானிட நலத்துக்கு அணுசக்தியைப் பயன்படுத்த முயல்வது மனிதக் கடமை நெறியில் பின்னியுள்ளது. இப்போது நாம் எதிர்நோக்கும் பிரச்சனை பௌதிக விஞ்ஞானம் அல்ல; மனித ஒழுக்க நெறி !
பெர்னார்டு மான்னஸ் பரூச் (Bernard Mannes Baruch)
Fig. 1A
Atmospheric Sun Blockage
"முஸ்லீம்களாகிய நாம் வல்லவராகவும், நம் நாடு மற்ற நாடுகளுக்கு இணையாகவும் இருக்க வேண்டும். அதனால்தான் சில நாடுகள் வல்லமையோடு இருக்க நான் உதவி செய்ய விரும்புகிறேன்,"
அப்துல் காதீர் கான் (Abdul Qadeer Khan, Maker of Pakistan Atomic Bomb)
"இந்தியா ஓர் அணு ஆயுதத்தைத் தயாரித்தால் பாகிஸ்தான் புல்லைத் தின்றோ இலைகளைத் தின்றோ பட்டினி கிடந்து அதைத் தானும் பின்பற்றிச் செய்யும்."
ஸ¤ல்·பிகார் அலி புட்டு (Zulifikhar Ali Bhuttu) பாகிஸ்தான் வெளிநாட்டு அமைச்சர்.
“அரசாங்கம் ஆணையிட்டால் இந்தியாவும் 18 மாதங்களில் இது (சைனா அணு ஆயுத வெடிப்பு) போன்று அணு ஆயுத சோதனை செய்ய முடியும்.”
டாக்டர் ஹோமி ஜெ. பாபா (அணுசக்திப் பேரவை முதல் அதிபர்) (1964)
Fig. 1B
India Vs Pakistan
அணு ஆயுத வெடிப்புக் குளிர்ச்சி நியதி !
ஜப்பான் ஹிரோஷிமா நாகசாக்கி நகரங்களில் போட்ட அணு ஆயுத வெடிப்புகள் போல மூன்றாம் உலகப் போர் நிகழ்ந்தாலும் சரி, அல்லது ஆயிரம் ஆண்டுப் போர் மூட்டிவரும் பாகிஸ்தானும் பாரதமும் தமது அணு ஆயுதங்களை ஏவி இரு நாடுகளும் மனித இனத்தை அழித்துக் கதிரியக்கப் பொழிவுகளைப் பரிமாறிக் கொண்டாலும் சரி, இறுதியில் கோடான கோடி டன் புகை மூட்டம் சூழ்வெளி மண்டலத்தில் சேர்ந்து இருள் மண்டிப் பரிதியின் ஒளி குன்றிப் பூமியில் பெருங்குளிர்ச்சி ஏற்பட்டு விடும் என்று ஒரு கோட்பாடு கூறப்பட்டு வருகிறது ! இந்த கோர விளைவைத்தான் 1983 இல் அணுவியல் /வானியல் பௌதிக விஞ்ஞானி கார்ல் சேகன் (1934 -1999) "அணு ஆயுத வெடிக் குளிர்ச்சி" (Nuclear Winter) என்று முதன்முதல் ஓர் எதிர்பார்ப்புக் கோட்பாடாக அறிவித்தார். போரில் பல்லாயிரம் கிலோ டன் டியென்டி ஆற்றல் கொண்ட பல்வேறு அணு ஆயுதக் குண்டுகள் வெடிப்பதால் ஏற்பாடும் பேரளவு புகை மண்டலம் பூமியின் மேல் நிலைச் சூழ்வெளி வாயு மண்டலத்தைச் (Earth's Upper Atmosphere) சேர்ந்து சூரிய ஒளி விழுங்கப் பட்டுத் தட்ப வெப்ப நிலையைச் சீர்குலைக்கும் என்பதுதான் கார்ல் சேகன் கோட்பாடு !
Fig. 1C
Global Cooling & Warming
அணு ஆயுத வெடிப்புத் தூசி மண்டலம் பரிதி வெளிச்சத்தை மறைத்துக் கொண்டு பூமியை ஓர் இருண்ட கண்டமாக்கி வரண்டு போகும் குளிர்க் கோளமாய் மாற்றிப் பல்லாண்டுகள் தங்கியிருக்கும் என்று சொல்லப் படுகிறது ! அதனால் பெருமளவு வேளாண்மைப் பயிர்கள் சேதம் அடைந்து பல நாடுகளில் பட்டினியும் பஞ்சமும் படிப்படியாகப் பரவும் என்று எதிர்பார்க்கப் படுகிறது ! அமெரிக்க ரஷ்ய நாடுகள் அல்லது பாகிஸ்தான் பாரத தேசத்துக்கு இடையே எதிர்காலத்தில் நேரக் கூடிய அணு ஆயுதப் போர்களால் "பூகோளக் குளிர்ச்சி" (Global Cooling) ஏற்படும் என்று சில விஞ்ஞானிகள் இப்போது கருதுகிறார். அந்த விஞ்ஞானிகளின் பௌதிகக் குரு காலஞ் சென்ற அணுவியல் / வானியல் நிபுணர் கார்ல் சேகன் (1934 -1999). கார்ல் சேகனின் முக்கியச் சீடர்கள் இருவர் : அலன் ரோபோக் & ஓவன் பிரையன் டூன் (Alan Robock & Owen Brian Toon).
Fig. 1D
Nuclear Arsenals of the World Nations
அலன் ரோபோக், ஓவன் பிரையன் டூன் இருவரது அணு ஆயுத வெடிப்புக் குளிர்ச்சிக் கோட்பாடு பூகோளக் குளிர்ச்சிக் காட்சிகளைக் (Global Cooling Scenerios) கணினி மாடல்கள் மூலமாகக் (Computer Models) கண்டு முடிவு செய்தவை. கடந்த காலங்களில் பூமியில் நேர்ந்த எரிமலைப் புகை மூட்டங்கள், கானகத் தீயெரிப்புகள், மற்ற பூதள வெளியேற்றங்கள் ஆகியவை அணு ஆயுத வெடிப்புக் குளிர்ச்சிக்கு ஆதாரமாகச் சான்றுகள் கூறுகின்றன. அணு ஆயுத வெடிப்புக் குளிர்ச்சிக் கோட்பாடு என்ன சொல்கிறது ? அணு ஆயுதப் போரில் அணுக்குண்டுகள் வெடித்த பிறகு கதிரியக்கப் பொழிவுகள் பூமியில் படிகின்றன. அதே சமயத்தில் எழும் புகை மண்டலம், கரித்தூள்கள், மற்ற பூமியின் சேதாரத் தூசிகள் யாவும் மேலேறிச் சூழ்வெளியில் கலக்கின்றன. அவை பரிதியின் ஒளியை மங்க வைத்து வான் வெளியை இருளடையச் செய்கின்றன. இறுதியாகச் சில மாதங்களில் பூமியின் உஷ்ணம் 1 முதல் 5 டிகிரி சென்டிகிரேட் வரைக் குறைந்து போகலாம். கணினி மாடல்கள் இந்த உளவு ஆராய்ச்சிகளில் கண்ட முடிவு என்ன வென்றால் ஒரு டிகிரி சென்டிகிரேட் உஷ்ண மிகையால் கூட "உயிரின ஏற்பு அமைப்பில் நிலைகேடு" (Ecosystem Unbalance) விளைந்து பூமியில் உயிரினப் பயிரினப் பாதிப்புகள் ஏற்படும் என்று அறியப்படுகிறது.
Fig. 1E
Agricultural Collapses
65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஓர் அசுர அணுக்குண்டு பூமியில் விழுந்தது போல், மெக்ஸிகோ அருகில் விழுந்த ஒரு பெரும் முரண் கோளால் (Asteroid) நேர்ந்த அதிர்ச்சியும் தூசி மண்டல எழுச்சியும் பரிதி ஒளியை விழுங்கி உஷ்ணம் தணிந்து போனதால் அக்காலத்தில் வாழ்ந்த டைனோஸார்ஸ் அனைத்தும் மாண்டு போனது இதற்கோர் தகுந்த உதாரணம்.
அணு ஆயுத வெடிப்புப் போர்களால் விளையும் புகை மூட்டக் குளிர்ச்சி!
கார்ல் சேகன் அணு ஆயுத ஆக்கத்தையும், அவற்றின் மேற்தள வெடிப்பையும் அறவே எதிர்த்தவர் ! 1980 ஆண்டுகளில் 'அணு ஆயுத வெடிப்புக் குளிர்ச்சி' [Nuclear Winter] என்னும் புதிய 'அணு ஆயுதப் புகை மூட்ட' எச்சரிக்கையை முதன் முதலில் உலகெங்கும் பறைசாற்றியவர், விஞ்ஞானி கார்ல் சேகன் (1934 -1999) ! அதன் விளக்கம் என்ன வென்றால், அணு ஆயுத வெடிப்புகளில் கிளம்பும் புகையும், தூசியும், கரிவாயுக் கோளமும் பூமியின் சூழ்வெளி மண்டலத்தைப் பேரளவில் பாதித்துப் பரிதியின் தட்ப வெப்ப அளவுகளைக் கூட்டிக் குறைத்துக் கால நிலையைக் கரைப்படுத்திப் பூமியைப் பல நாட்களுக்கு ஒரு குளிர்க்கோளமாய் ஆக்கிவிடும் என்று கூக்குரல் இட்டார் !
Fig. 1F
Ozone Depletion due to Nuclear Winter
அணு ஆயுத வெடிப்புக் குளிர்ச்சி வேளாண்மைத் தானியங்களைச் சரிவர வளர விடாமல் பாதித்து மனிதர் மற்றும் விலங்கினங்கள் ஆகாரம் இல்லாமல் பஞ்சம், பட்டினியில் துன்பப்படும் என்று உலக வல்லரசுகளையும், அணு ஆயுதப் போர்வைக்குள் ஒளிந்து பின்புறமாய் தயாரித்துக் கொண்டிருக்கும் மெல்லரசுகளையும் கார்ல் சேகன் எச்சரிக்கை செய்தார் ! ஹைடிரஜன் குண்டு ஆயுதப் பிதா, டாக்டர் எட்வெர்டு டெல்லர் போன்ற தீவிரவாத விஞ்ஞானிகள் கார்ல் சேகனின் அணு ஆயுதக் குளிர்ச்சிக் கோட்பாடை ஒப்புக் கொள்ளாது தப்பென ஒதுக்கித் தள்ளினார்கள்!
அணு ஆயுதப் போர் வெடிப்புக் குளிர்ச்சியால் நேரும் சீர்கேடுகள்
2000 இல் சோவியத் தலைவர் மிக்கேல் கார்பச்செவ் (Mikhail Gorbachev) ரஷ்ய அமெரிக்க விஞ்ஞானிகள் செய்த கணினி மாடல்கள் எதிர்காலத்தில் அணு ஆயுத யுத்தம் ஒன்று வருமானால் அணு ஆயுத வெடிப்புக் குளிர்ச்சி (Nuclear Winter) உண்டாகும் என்றும் அதனால் பூமியில் அனைத்து உயிரினங்களுக்கும் அழிவு நேரும் என்றும் எச்சரிக்கை செய்தார். அந்த அறிவுரை புத்துணர்ச்சி ஊட்டும் போதனையாக நன்னெறியைப் பின்பற்றும் நபருக்கு விழிப்புணர்ச்சி தரும் என்றும் குறிப்பிட்டார். அதனால் அணு ஆயுத வெடிக் குளிர்ச்சிப் பயமானது உலக நாடுகளின் அணு ஆயுதப் பெருக்கப் பந்தயத்தை நிறுத்த அது ஒரு முக்கிய காரணமாக வலியுறுத்தப்பட வேண்டும்..
Fig. 2
Environmental Damage
உலக வல்லரசுகளுக்கு இடையே ஊர்ந்து வந்த ஊமைப்போர் (Cold War) 1990 ஆண்டுகளில் முடிந்த பிறகும் நாம் ஏன் அணு ஆயுத அடுக்குகளுக்கு அஞ்ச வேண்டும் என்ற ஒரு கேள்வி எழலாம். காரணம் மெல்லரசுகள் பல இப்போது தம் கைவசம் அணு ஆயுதங்களை இரகசியமாய்த் தயாரித்து ஒளித்து வைத்திருப்பதுதான் ! உதாரணமாக இப்போது பாகிஸ்தான் மூர்க்கப் படைத் தாக்குதலை நிறுத்த, பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்து போரில் பல அணு ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டு நூற்றுக் கணக்கான அணுக்குண்டுகள் இருபுறமும் வீசப்பட்டால் அதன் கோர முடிவு பூகோள வேளாண்மை விளைச்சலைப் பேரளவில் முடக்கி விடும். ஒரு பிராந்தியப் போரால் உலகளாவியச் சேதாரங்களும் உயிரின இழப்புகளும் நேரிடும் ! நீண்ட கால அணு ஆயுதப்போரில் உள்நாட்டு மக்கள் பேரளவில் மடிவதோடு உலக நாட்டு மாந்தரும் பாதிப்படைவார். நேரடித் தாக்குதலிலும், தீக்காயங்களிலும் பின்னர் கதிரியக்கத்திலும் பாதிக்கப் பட்டு உள்நாட்டு மக்கள் சுமார் 20 மில்லியன் பேர் மரிப்பார் ! இரு நாடுகளைக் கடந்து அப்பால் உலக நாடுகளிலும் சூழ்வெளி பாழ்பட்டு வேளாண்மை சீர்கேடாவதால் ஒரு பில்லியன் மக்கள் உணவுப் பற்றாக்குறையிலும் பட்டினியாலும் சாகலாம்டென்று யூகிக்கப் படுகிறது !
Fig. 3
Ruined Crops
உலக மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய பாடம் !
அணு ஆயுத யுகம் ஒளிமறைவாக உதயமானது. ஹிரோஷிமா, நாகசாக்கியில் ஈரணுக் குண்டுகளைப் போட்ட பிறகு இருபதாண்டுகளாக அணு ஆயுத ஏகாதிபதிகள் கதிரியக்கத்தால் நேரக்கூடிய மனித உடற் கேடுகளைக் கூறாமல் மறைத்து வைத்திருந்தனர். பிடிவாதத்துடன் மருத்துவ ஆராய்ச்சி செய்யும் டாக்டர் அலிஸ் ஸ்டீவர்ட் (Dr. (Mrs) Alice Stewart) என்னும் பெண்மணிதான் முதன்முதலில் தணிவு நிலைக் கதிர்வீச்சால் (Low Level Radiation) விளையும் உடற் பாதிப்புக்களைக் கூறி உலகுக்கு அணு ஆயுதங்களைப் பற்றி எச்சரிக்கைகள் செய்தார்.
இன்னும் இரண்டு பிறப்பாண்டுகளில் (Generations) மனித இனத்தின் எதிர்கால விதி தீர்மானிக்கப்படப் போகிறது ! அதற்கு இரு மிக முக்கியத் தேவைப்பாடுகள் என்ன ? மனித இனவிருத்திக் கட்டுப்பாட்டுக்குள் நாம் ஒரு நிலையான சமூக வளர்ச்சிக்குக் குறிவைக்க வேண்டும். அடுத்து உலகிலுள்ள அணு ஆயுத அடுக்குகளை முடக்கி அனைத்தையும் முறிக்க வேண்டும். இல்லாவிட்டால் நாம் 2050 ஆண்டுக்கு மேல் எப்படி உயிர் பிழைத்து வாழ முடியும் என்பது எனக்குத் தெரியாது என்று ஜேக்ஸ் மோனாடு 1971 இல் கூறினார்.
Fig. 4





    
                 
              புது வசதிகளுடன் மாற்றங்களுடன்          
                                        பேஸ்புக்

சமூக வலைப்பின்னல் உலகில் தினம் தினம் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்திவரும் பேஸ்புக் தற்போது புரொபைல் பேஜ் வடிவத்தினை மாற்றியமைத்துள்ளதுடன், வசதிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
நமது புதிய பேஸ்புக் புரோஃபைல் பேஜ் வடிவமைப்பானது படிப்படியாகவே மாற்றப்பட்டு வருகின்றது. எனினும் நீங்கள் விரும்பினால் இந்த வசதியினை உடனடியாக பெற்றுக் கொள்ளவும் முடியும்.


இதனை உடனடியாக பரிசோதிக்க விரும்பின்,


A ) இம் முகவரியில் சென்று உங்கள் கணக்கினுள் நுழையவும்.
B) பின்னர் வலது பக்க மேல் மூலையில் தரப்பட்டுள்ள ' You have the new profile' என்று குறிப்பிடப்பட்டுள்ள பச்சை நிற பட்டனை அழுத்தவும்.
c) இப்போது உங்கள் புரோஃபைல் மாற்றமடைந்திருக்கும்.
தற்போது புதிய வடிவில் தரப்பட்டுள்ள வசதிகள் மற்றும் மாற்றங்கள் பற்றி பார்வையிடுவோம்.
1) முதலாவதாக உங்களைப் பற்றியதொரு சிறிய அறிமுகம் தரப்படும் நீங்கள் எங்கு கல்வி கற்றீர்கள், பிறந்த திகதி, எங்கு வளர்ந்தீர்கள்? தற்போது என்ன செய்கிறீர்கள் என்பது தொடர்பிலானது இந்த அறிமுகம்.
அதற்குக் கீழ் அண்மையில் டெக் செய்யப்பட்ட புகைப்படங்கள் எனினும் இவ்விடயத்தில் உங்கள் 'பிரைவசி' தொடர்பான எல்லைகள் மீறப்படவில்லை காரணம் நீங்கள் அனுமதியளித்தவர்கள் மட்டுமே இப்புகைப்படங்களைப் பார்வையிட முடியும்.
2) மிக இலகுவாக மற்றைய வோல், இன்போ, போடோஸ் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் வசதி.
3) தற்போது உங்கள் தொழில் மற்றும் கல்வி என்பன பற்றி அதிகமாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியும். மேலும் உங்களுடன் இருந்த நண்பர்களை உள்ளடக்க முடிவதுடன் - உங்கள் அனுபவங்கள், திட்டங்கள் தொடர்பிலும் குறிப்பிட முடியும்.
4) உங்களுக்கு பிடித்தமான இசை, வீடியோ, விளையாட்டு, விருப்பங்கள் ஆகியவற்றை 'விஷுவல்' வடிவில் காணமுடியும்.
5) இவற்றில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவதுதான் நண்பர்களை அவர்களூடான உங்களின் தொடர்புக்கு ஏற்ப பிரித்துக் கொள்வதாகும். கீழ் காட்டியவாறு அவர்களைப் பிரித்து பட்டியலிட்டுக் கொள்ள முடியும். உறவினர்கள், சிறந்த நண்பர்கள், சக ஊழியர்கள், பாடசாலை நண்பர்கள் போன்றோர் அடிப்படையில் இதனைப் பிரித்துக்கொள்ள முடியும்


                 
             பெண்  துணையின்றி ஆண்களும்  
              குழந்தை  பெற்றுக்   கொள்ளலாம்


 குழந்தைப் பேறு என்பது பெண்களுக்கே உரியது. தாய்மை அடையும் பாக்கியம் அவர்களுக்கே உள்ளதால் அவர்கள் பெருமையுடன் போற்றப்படுகின்றனர்.
ஆனால், பெண் துணையின்றி ஆண்களும், ஆண் துணையின்றி பெண்களும் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தற்போது “ஸ்டெம்செல்” மூலம் பல அரியவகை அற்புத சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. “ஸ்டெம்செல்” சிகிச்சையின் மூலம் கொடிய நோய்கள் கூட குணப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த அதிநவீன “ஸ்டெம் செல்” தொழிற் நுட்பத்தை பயன்படுத்தி அமெரிக்க விஞ்ஞானிகள் 2 ஆண் எலிகள் மூலம் குட்டி எலிகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். டெக்சாஸ் இனப்பெருக்க விஞ்ஞானிகள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
அதன் அடிப்படையில் மனிதர்களிலும் பெண் துணையின்றி ஆண்களே குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே போன்று ஆண்கள் இல்லாமல் பெண்களே குழந்தை பெற்றுக் கொள்ளலாம். இது ஓரின சேர்க்கை தம்பதிகளுக்கு வசதியாக அமையும்.


           
          


   Youtube- லிருந்து ஒலி (mp3) மட்டும்
                         பிரித்து எடுக்க!


Youtube தான் உலகின் மிக பெரிய வீடியோ இணையதளம்.  இதில் இல்லாத பாடல்களே இல்லை எனலாம்.  முந்தைய பதிவில், Youtube-லிருந்து எப்படி mp4 ஆக தரவிறக்கம் செய்வது பற்றிப் பார்த்தோம்.  இந்த பதிவில், எப்படி mp3-ஆக தரவிறக்கம் செய்வது பற்றிப் பார்ப்போம்.  அதாவது, வீடியோ காட்சி இல்லாமல், பாடல் ஒலியை மட்டும் பிரித்தெடுத்துத் தரவிறக்கம் செய்திடலாம்.  இதனால், நேரமும், bandwidth-ம் மிச்சம்.
கீழேக் கொடுக்கப்பட்டுள்ள இணைய தளத்திற்குச் சென்று, அதில் எந்த வீடியோவின் ஒலியைத் தரவிறக்கம் செய்ய வேண்டுமோ, அதன் முகவரியைத் தரவும்
.
உதாரணத்திற்கு,  http://in.youtube.com/watch?v=L4HSg8nM-sU, இந்த பாடலின் ஒலியைத் தரவிறக்கம் செய்திட,  http://www.youtube.com/watch?v=L4HSg8nM-sU என உள்ளிடவும்.  அதாவது, முதலில் இருக்கும் "http://in"-ஐ "http://www" என மாற்றி உள்ளிட்டு, ”Go"ஐ சொடுக்கினால், சிறிது நேரத்தில், download link கிடைத்து விடும்.